பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

15

இதனை எண்ணித் தெளிவாக உணர்ந்த திருவள்ளுவப் பெருந்தகை உலகம் நலமெய்துமாறு கூறியுள்ளார்.

"மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தையும் ஐந்து உறுப்புக்கள் என்று சொல்லுகிறார்கள்; அவை எளிய உறுப்புக்கள் இல்லை. வலிய யானை போன்றவை-கட்டுக்கு அடங்காது செல்லும் மதயானை போன்றவை. அவற்றை அடக்கி ஆண்டால் ஒழிய மனிதன் நன்மை அடைய முடியாது. இவ்யான அடக்க வழியென்ன?

வ்யானைகளை

யானையை அடக்கவதற்குப் பல கருவிகள் உள. குத்துத்தடி, கவைமுட்கருவி, தோட்டி-இப்படிப் பல உள. குத்துத் தடியும், கவைமுட்கருவியும் யானையைப் புண்ணாக்கி வலியினால் ஓடி இளைக்கச் செய்து அடக்குவன. தோட்டியோ, புண் ஆக்காமலும், மேலே போகவிடாமலும் நிலைகுலையச் செய்து நிறுத்துவது; உறுப்புக்களாகிய கொடிய யானைகளை ஒருவன் அடக்க வேண்டுமானால் அவனுக்குச் சரியான தோட்டிதான் வேண்டும். (தோட்டி வளைந்திருக்கும் கருவி; தோட்டி-தொரட்டி என வழங்குகிறது. அங்குசம் என்பர்.) அத்தோட்டி யாது?

போன வழிகளிலெல்லாம் போக விடாதது அறிவு; தீயவற்றிலிருந்து விலக்கித் தடுத்து நிறுத்துவது அறிவு; நல் வழியில் செலுத்துவதும் அறிவு; ஆதலால் அறிவினும் உயர்ந்த தோட்டி இல்லவே இல்லை. அவ்வறிவுத் தோட்டி கொண்டே அடக்கல் வேண்டும்.

அப்படி அடக்கினால் என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது? நினைத்த அனைத்தும் கிடைக்கும்! இவ்வுலக நன்மைகளும் மேலுலக நன்மைகளும் எளிதில் எய்தும்.

நல்ல வித்து ஒன்று உள்ளது. அதை வாய்ப்பு மிக்க நல்ல நிலத்திலே உரிய பருவத்திலே போட்டால் முளைக்காதா? நன்றாக முளைக்குமல்லவா! அறிவு என்னும் தோட்டியால் ஐம்புலன்களை அடக்குபவன், மேலுலகமாம் நன்னிலத்தில் முளைக்கத்தக்க விதையாவான்."

இவ்வளவு கருத்துக்களையும் எவ்வளவு சுருக்கமாகக் கூறியுள்ளார் வள்ளுவர்!

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.