பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

திங்களுக்கு ரூ.100 கடன் பட்டான் என்றால், ஆண்டில் 1200க்குக் கடனாளியாகின்றான். அவன் 40 ஆண்டுகள் வாழ்ந்தால் ரூ.48000க்கும் கடன் ஏறுமல்லவா? இத்தகையவனைப் போய்த் தொலைய மாட்டானா என்றுகூட ஏங்குபவர்கள் இருக்கத்தானே செய்வர்!

ஆனால், ரூ.1000 ஊதியம் பெறும் ஒருவனது வேலைக் காரனாக இருந்து, திங்களுக்கு ரூ.50 சம்பளம் பெறும் ஒருவன், தன் பெண்டுபிள்ளைகளின் செலவை ரூ. 30க்குள் முடித்துக் கொண்டு, திங்களுக்கு ரூ. 20 மீதம் வைத்து, ஆண்டில் ரூ. 240ம் அவன் பணியாற்றிய 30 ஆண்டுகளில் ரூ. 7200ம் திரட்டி, வீடும் நிலமும் வாங்கி, கையிருப்பும் காட்டிச் செல்கின்றான். ஏன்? நல்லுள்ளம் படைத்த பணியாளாக அவன் இருப்பான் என்றால் கடன் துயருக்கு ஆட்பட்டுக் கைக்காசு தருவோர் இல்லாமல், இறந்து கிடக்கும் மேலாளின் இறுதிச் செலவுக்குக்கூடத் தன் கையிலிருந்து தருவான்! இந்நிகழ்ச்சிகள் நடைமுறையில் இல்லாதவையா?

இவற்றை எண்ணிப் பார்த்தால் என்ன புலனாகின்றது?

வருவாய் எவ்வளவாக இருந்தாலும் கவலையில்லை. வருவாயினும் செலவினம் குறைதல் வேண்டும். வருவாயைக் கொண்டு மதிப்பிடத்தக்கது இல்லை வாழ்வு ! செலவைக் கொண்டு மதிப்பிடப் படுவதே வாழ்வு!

வருவாய் குறைவாய் இருப்பினும் குற்றம் இல்லை; அவ் வருவாயினும் மிகுதியாக வெளியேறி விடாதவாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்று அறவோர் அறிவுறுத்துவர். அவரே அளவிட்டு வாழாதவன் வாழ்வு, கரையற்ற குளத்தில் பெருகிய நீருக்கு இணை என்று உவமை காட்டுவர்.

வருவாய்க்கு ஏற்பச் செலவிடுதல் ஆணின் பொறுப்பா? பெண்ணின் பொறுப்பா? இல்லை-இல்லத் தலைவன் பொறுப்பா? தலைவி பொறுப்பா? இருவர் பொறுப்பும்தான். இருப்பினும், தலைவிக்கே மிகுதியான பொறுப்பு உண்டு. ஏனெனில் இல்லத்தை ஆள்பவள் யாவள்? அவளே இல்லாள்!

ஏழு பால் மாடுகள் வைத்திருந்த ஒருத்தி, ஒரு பால் மாடு வைத்திருந்த ஒருத்தியிடம் 'பிரைமோர்' கேட்டுப் போனாளாம்! எப்படி? இப்படி மாடி வீட்டு வாழ்வு உடையவர்களும், மண் குடிசையகத்துச் சென்று அரிசியும் உப்பும் பருப்பும் எண்ணெயும்