பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. கேமன்‌ : பிறன்மனை நயந்த பேதை

இராசக்கிருக நகரத்தில்‌, பிம்‌பிசார அரசன்‌ அரசாண்ட காலத்தில்‌, அந்த அரசனுக்குப்‌ பொருள்‌ காப்பு அமைச்சராக இருந்தவர்‌ பெருஞ்செல்வரான அனாதபிண்டிகர்‌ என்பவர்‌. இவருக்கு அழகில்‌ சிறந்த மருகன்‌ ஒருவன்‌ இருந்தான்‌. இந்தக்‌ கட்டழகன்‌ பெயர்‌ கேமன்‌ என்பது. கேமன்‌ உரிய அகவை அடைந்து, கட்டழகு மிக்க காளையாக விளங்கினான்‌. இவனுடைய உடல்‌ அழகையும்‌, வாலிப வயதின்‌ செவ்வியையும்‌ காணும்‌ மகளிர்,‌ இவனைப்‌ பெரிதும்‌ விரும்பினர்‌. கேமனும்‌, ஆண் மகனுக்கு இருக்க வேண்டிய நிறையுடைமை என்னும்‌ மனத்தை அடக்கும்‌ ஆற்றல்‌ இல்லாதவனாக, பிறன் மனை நயந்து ஓழுக்கந் தவறி நடந்து கொண்டான்‌. ஆகவே, இவனை எல்லாரும்‌ வெறுத்தார்கள்.

ஒரு நாள்‌ இரவு, கூடாவொழுக்கத்தின்‌ பொருட்டு, நகரத்தில்‌ சுற்றித் திரிந்த கேமன்‌, பின்னிரவில்‌ தன்‌ வீட்டுக்குத்‌ திரும்பி வந்து கொண்டிருந்தான்‌. காவல்‌ சேவகர்‌ அவனைப்‌ பிடித்துக் கொண்டு போய்‌, அரசனிடம்‌ விட்டார்கள்‌. அரசன்‌ இவன்‌ இன்னான்‌ என்பதை அறிந்து, இவனைத்‌ தண்டித்தால்‌, அமைச்சரின்‌ மானம்‌ கெடும்‌ என்று கருதி, மன்னித்து விட்டு விட்டார்‌. ஆனால்‌, கேமன்‌ தன்‌ தீய ஒழுக்கத்தைத்‌ திருத்திக்‌ கொள்ளவில்லை. பழையபடியே, பிறன்மனை நயந்து ஒழுகினான்‌. மீண்டும்‌ ஒரு முறை நகரக்‌ காவலரிடம்‌ சிக்குண்டான்‌. மீண்டும்‌ அரசர்‌, அமைச்சரின்‌ மானத்‌தைக்‌ கருதி, அவனைத்‌ தண்டிக்காமல்‌ விட்டார்‌. கேமன்‌