பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிச்சைச் சோறு

3

வாங்கி, அதை முதன்முதலாக உண்ணத் தொடங்குகிறார்‌. ஒரு கவளம்‌ கையில்‌ எடுத்து, வாயில்‌ வைக்கிறார்‌. வாய்‌ குமட்டுகிறது; இந்த உணவை ஏற்றுக் கொள்ள மனம்‌ மறுக்கிறது; குடலைப்‌ புரட்டுகிறது. அவர்‌ இது வரையில்‌, பிச்சைச்‌ சோற்றைக்‌ கண்ணாலும்‌ பார்த்ததில்லை. இப்போது இதைக்‌ கண்டு, இதை உண்ண மனம்‌ மறுக்கிறது. வாயும்‌, வயிறும்‌ உண்ண மறுக்‌கிறதைக்‌ கண்டு இந்தத்‌ துறவி — புத்த நிலையை அடையப்‌ போகிறவர்‌—தம்‌ மனத்திற்கு இவ்வாறு அறிவுரை கூறினார்‌ :

“சித்தார்த்த! நீ செல்வம்‌ கொழித்த, சிறந்த அரச குடும்பத்திலே பிறந்து வேளை தோறும்‌ அறுசுவை உணவுகளை உண்ணவும்‌, தின்னவும்‌ பழகினாய்‌. சாலி நெல்‌ அரிசியால்‌ சமைத்த மணமும்‌, சுவையும்‌ உள்ள சோற்றை உண்டனை. அமிர்தம்‌ போன்ற. சுவையுடைய பாலும்‌, தேனும்‌, பாகும்‌, பருப்பும்‌ உட்‌கொண்டனை. இப்படியிருந்த நீ கந்தையை உடுத்தியிருந்த ஒரு துறவியைக்‌ கண்டு, ‘நானும்‌, இவரைப்‌ போலத்‌ துறவு பூண்டு, உணவை இரந்துண்டு வாழும்‌ நாள்‌ எப்போது வரும்‌; அந்த நிலையை எப்போது அடையப் பெறுவேன்‌’ என்று நினைத்து ஏங்‌கினாய்‌; இப்‌போது நீ இல்லற வாழ்க்கையை விட்டு, நீ விரும்பிய துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறாய்‌! பிச்சைச்‌ சோற்றைச்‌ சாப்பிட ஏன்‌ மறுக்கிறாய்‌? இதை ஏன்‌ வெறுக்கிறாய்‌? நீ செய்வது முறையல்லவே. துறவிகள்‌ உண்ண வேண்டியது பிச்சைச்‌ சோறுதானே!”

இவ்வாறு இவர்‌ தமக்குள்‌ சொல்லிக் கொண்ட போது, இவர்‌ மனத்தில்‌. இருந்த வெறுப்பு உணர்ச்சி.