பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகில்

3

அகத்திக் கீரையில் 8.4% புரதமும் 1.4% கொழுப்பும் 3.1% தாது உப்புக்களும் 73% நீரும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக் கீரையுடன் சுண்ணாம்புச் சத்து, மாவுச் சத்து, இரும்புச் சத்து, ‘ஏ’ வைட்டமின் ஆகியவையும் உள்ளன. அகத்திக் கீரையோடு பூவும் சமைத்து உண்ணப்படுகிறது. அகத்தி, மாடுகளுக்கும் கோழிகளுக்கும் சிறந்த தீவனமாகும்.

அகத்தி இலை


அகத்தி இலையிலிருந்து ஒருவகை தைலம் தயாரிக்கப்படுகிறது. இது கண்களுக்கு மிகுந்த குளிர்ச்சி தருவதாகும். அகத்தியின் பட்டையும் வேரும்கூட மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகிறது. அகத்தி மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் நார் மீன்பிடி வலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அகத்திப் பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அகத்திப் பட்டைச் சாறு சிரங்கு மருந்தாகவும், வேர் மூட்டுவலி மருந்தாகவும் அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது. பட்டை உரிக்கப்பட்ட வெண்மைநிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடி மருந்து செய்யவும் பயன்படுகிறது.

வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக் கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.


அகில் : சந்தனம் போன்று மணம் தரும் மரங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் அகில் மரம். இது நீண்டு பருத்து வளரும். 20 மீட்டர் முதல் 25 மீட்டர் உயரம்வரை வளரும். இம் மரத்தின் சுற்றளவு 2 முதல் 8 மீட்டர்வரை இருக்கும். இதன் இலைகள் எந்நாளும் பச்சை நிற வண்ணமுடையதாகத் தோற்றமளிக்கும். அவை மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இலைகளின் முனை கூர்மைத் தோற்றமுடையனவாக இருக்கும். அகில் மரப் பூக்கள் வெண்மை நிறமுள்ளதாகும். அவை குடைப் பூங்கொத்துபோல் தோற்றமளிக்கும். அகில் மரக் கனிகள் மேன்மைமிக்கதாக இருக்கும். அதன் வடிவம் தலைகீழ் முட்டை போன்றிருக்கும்.

அகில் மரம் பல்வேறு பயன்பாடுள்ள பொருளாக அமைந்துள்ளது. பிற மரங்களில் வெளிப் புறத்தில் பிசின் வடிவதுபோல் இதில் வடிவதில்லை. எனினும், முதிர்ச்சி பெற்ற அகில் மரத்தின் உட்பகுதியில் கருநிறக் கட்டிகள் உருவாகியிருக்கும். இக்கட்டிகள் எண்ணெய்ப் பசை நிறைந்ததாகும். எண்ணெய்ப் பிசின் போன்ற இக்கருமைப் பொருளே 'அகில்' என அழைக்கப்படுகிறது. கிளைகள் கிளைத்துள்ள பகுதிகளில் இக்கருமைப் பொருள் உருவாகிறது. இஃது உருவாவதற்கு அடிப்படைக் காரணம் இம்மரங்களில் உருவாகிப் பற்றிப் படர்ந்து வளர்ந்து வரும் ஒருவிதக் காளான் ஆகும்.இக்காளானும் அதைத்தொடர்ந்து உருவாகும் கருமைக் கட்டிகளும் உள்ள மரம் பார்ப்பதற்கு நோயாளி மரம் போன்று தோற்ற மளிக்கும். காளான் பற்றியுள்ள மரத்துண்டை வெட்டியெடுத்து நல்ல அகில் மரத்தில் முளையடித்து வைத்தால் எளிதில் இரண்டாம் மரத்தைக் காளான் பற்றிக்கொண்டு வளர்ந்து படரும். அதன்மூலம் அகிலும் உருவாகும்.

அகில் கட்டிகள் மிகுந்த மணமுள்ளவை. இவற்றைச் சேகரிக்க முதிர்ந்த மரத்தை வெட்டிச் சிறுசிறு துண்டுகளாக்குவர். அகில் மரத்தின் சிறுசிறு துண்டுகளும் குச்சிகளும் மணப் பொருளாகக் கடைகளில் விற்கப்படுகின்றன. இவற்றை நெருப்பில் இட்டால் சாம்பிராணி புகைபோன்று மணமிக்க புகை வெளிவரும். இவை சந்தனத்தைப்