பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்சியம்

125

பொருட்களிலிருந்தும் குறைந்த அளவு மிருகங்களிடமிருந்தும் பெறுகிறோம்.

கார்போஹைட்ரேட்டாகிய மாச்சத்துப் பொருட்கள் சர்க்கரையுள்ளவை, சர்க்கரையற்றவை என இரு பகுதிகளைக் கொண்டதாகும். சர்க்கரை, குளுகோஸ் போன்றவை சர்க்கரை வகையினவாகும். அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு இவற்றில் உள்ள ஸ்டார்ச்சுகள் சர்க்கரையற்றவைகளாகும்.

மரம், சணல் முதலியவற்றிலிருந்து செல்லுலோசைப் பெறுகிறோம். இது சர்க்கரை இல்லாத கார்போஹைட்ரேட் ஆகும். இச்செல்லுலோசிலிருந்து செயற்கைப்பட்டு துணி, காகிதம், ஆல்கஹால், பிளாஸ்டிக், திரைப்படத் தகடுகள் ஆகியன உருவாக்கப்படுகின்றன. செல்லுலோசுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வெடி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. செல்லுலாய்டு என்ற குழைமப்பொருள் செல்லுலோசிலிருந்தே உருவாக்கப்படுகிறது.

குளுகோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை (Blood sugar) என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இச்சர்க்கரைச் சத்துதான் இரத்தத்தில் கலந்து உடலுக்கு வேண்டிய ஆற்றலை தருகிறது. இரத்தத்தில் உள்ள குளுகோஸின் செறிவு சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. எட்டு மணியிலிருந்து 12 மணிவரை ஆகாரம் ஏதும் இல்லாமல் இருக்கும் பொழுது ஒரு ஆரோக்கியமான மனிதரின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 100 மி.லி.யில் 70இல் இருந்து 100 மி. கிராம் இருக்கும். பெரும்பாலான மனிதர்களுக்குச்சாப்பிடும் முன் இந்த அளவு சர்க்கரை இருக்கும், இந்தத் திட்ட அளவிற்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்கும். இந்தத் திட்டஅளவிற்கும் குறைவான அளவு சர்க்கரை இருந்தால், இது ஹைபோகிளைசிமியா (Hypoglycemia) என அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக மூளைக்குச் செல்லும் குளுகோஸ் அளவு குறைவுபடுமாதலால் மயக்கம் அடைய வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று திட்ட அளவிற்கு அதிக அளவு சர்க்கரை இருந்தால் அதுவே ஹைபர்கிளைசிமியா (Hyperglwcemia) என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சிறு நீரகம் அதிக அளவு சர்க்கரையை சிறுநீரின் மூலம் வெளியேற்றுகிறது. இதுவே 'நீரிழிவு’ என்ற நோய்க்குக்காரணமாகிறது. 'இன்சுலின்’ என்னும் என்ஸைம் இரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை குறைக்கிறது.


காரீயம் : இது ஒரு தனிமம் ஆகும். ஒரு உலோகம் என்ற முறையில் பன்னூறு ஆண்டுகட்கு முன்பிருந்தே காரீயத்தைப் பற்றி அறிந்திருந்ததோடு அதைப் பயன்படுத்தியும் வந்தனர். ரோமானியர்கள் அக்காலத்தில் சிலை செய்யவும் தண்ணீர் தொட்டிகள், குழாய்கள் அமைக்கவும் காரீயத்தைப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.

நீல வண்ணத்தோடு கூடிய சாம்பல் நிற காரீயம் மிருதுவாகக் காணப்பட்டாலும் இரும்பை விட உறுதியானதாகும். இதை எளிதில் வளைக்கலாம். காரீயம் எதனாலும் அரிக்கப் படுவதில்லை.

காரீயம் பெரும்பாலும் பிற உலோகங்களுடன் கலந்தே பயன்படுத்தப்படுகிறது. அச்சிடுவதற்கான அச்செழுத்துக்கள், துப்பாக்கிக் குண்டுகள், சாயங்கள் இவையெல்லாம் காரீயம் கலந்தே செய்யப்படுகின்றன. சில வகைக் கண்ணாடிகள் செய்யவும் காரீயம் பயன்படுகிறது.

காரீயம் தனிக் கனிமமாக இயற்கையாகக் கிடைப்பதில்லை. பிற உலோகக் கலவைகளிலிருந்தே தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, பர்மா போன்ற நாடுகளில் அதிக அளவில் காரீயம் கிடைக்கிறது.

காரீயம் கலந்த 'காரீயடெட்ரா ஈதைல்’ எனும் திரவம் ஊர்திகளில் பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஊர்திப் பொறியின் இடிக்கும் (Knocking) தன்மை குறைகிறது.

இவ்வாறு பெட்ரோல் (அ) டீசலில் கலக்கும் டெட்ரா ஈதைல் காரீயம் வாகனங்களை இயக்கும்பொழுது, காற்றில் கலந்து மாசுகளை அதிகப்படுத்துகிறது. இதனால் சுவாசிக்கும் காரீயத்தின் அளவு அதிகரிக்கிறது.இதன் காரணமாக இரத்தத்தில் காரீயம் கலந்து பக்கவாதம், கண்குருட்டுத்தன்மை, மன வளர்ச்சிக் குறைவு ஆகியவைகள் உண்டாகக் காரணமாகிறது. காரீயத்தால் செய்யப்பட்ட குழாய்களை குடி நீர்க் குழாய்களாகப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் காரீயமானது நீருடன் வினை புரிந்து காரீய ஹைடிராக்சைடு என்ற நச்சுத் தன்மை உடைய சேர்மத்தை உண்டாக்கும். இது உயிரினங்களை மெதுவாக கொல்லக் கூடிய மிகக் கொடிய நச்சுப் பொருளாகும்.


கால்சியம் : இது ஒருவகை தாதுப் பொருளாகும். இது தனியாகக் கிடைப்பதில்லை. பிற