பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

பொறியியல்

பெனிசிலினைப் பிளெமிங் 1928இல் கண்டுபிடித்த போதிலும் 1989ஆம் ஆண்டில் தான் முழுமையான மருந்தாகத் தயாரித்துப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு தயாரிப்பதில் பிளெமிங்குக்குப் பேருதவி புரிந்தவர்கள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹோவர்டு புளோரி, எர்னெஸ்ட் செயின் ஆகியோராவர். இவர்கள் மூவருக்கும் இம்மருந்தைக் கண்டுபிடித்ததற்காக 1945 இல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பெனிசிலின் மருந்து தயாரானபோது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. போர்க்காலத்தில் காயம்பட்டவர்களுக்கும் நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் அருமருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரவர் உயிர்களைக் காத்ததால் இம்மருந்தின் சிறப்பும் புகழும் மின்னல் வேகத்தில் உலகெங்கும் பரவியது. அதற்கேற்ப பெனிசிலின் மருந்தின் உற்பத்தியும் பன்மடங்கு பெருகியது. தொடக்கத்தில் விலையுயர்ந்த மருந்தாக இருந்த பெனிசிலின் பின்னர் விலை குறைந்து மலிவு மருந்தாக ஆகி அனைவருக்கும் பயன்படலாயிற்று.

ஆன்டிபயோட்டிக் என அழைக்கப்படும் பாக்டீரியா கிருமி எதிர்ப்பு மருந்தான பென்சிலின் திரவமாகவும், பொடியாகவும், மாத்திரையாகவும் களிம்பாகவும் கிடைக்கிறது. இம்மருந்து உலகெங்கும் இன்று தயாரித்துப் பயன்படுத்தப்படுகிறது.


பொட்டாசியம் : கார உலோகங்களில் ஒன்றான பொட்டாசியம் ஒரு தனிமம் ஆகும். இது வெள்ளிபோலத் தோற்றமளிக்கும். மிகவும் மென்மைத் தன்மையுடையதாகும். கனம் குறைந்த இத்தனிமத்தை நீரில் போட்டால் அமிழாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் இருக்கும்போது அதனுடன் வினைப்பட்டு வெப்பத்தை வெளிப்படுத்தும், அவ்வெப்பத்தின் விளைவாக நீரிலுள்ள ஹைட்ரஜன் வாயு வெளிப்படும். வெப்ப மிகுதி காரணமாக ஹைட்ரஜன் தீப்பற்றி எரியும். மேலும், பொட்டாசியம் காற்று, ஈரம் ஆகியவற்றோடு எளிதில் வினைப்படுவதால் இதை எப்போதும் மண்ணெண்ணெயில் போட்டு வைப்பது வழக்கம்.

பொட்டாசியம் தனியே கிடைப்பதில்லை. கூட்டுப் பொருளாகப் பெஸ்பார் பாறைகளில் கிடைக்கிறது, சாக்கடல், சியர்ல்ஸ் ஏரி ஆகியவற்றில் உள்ள நீர்களில் கரைந்து கிடைக்கிறது. இந்தியாவில் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் படிவுகளாகவும் பஞ்சாப், ஒரிசா, பீகார், உத்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வண்டல் மண்ணாகவும் கிடைக்கிறது.

பொட்டாசியத்தை மின்பகுப்பு முறையில் முதன்முதலாக 1909இல் பிரித்தெடுத்தவர் டேவி என்னும் ஆங்கில விஞ்ஞானியாவார்.

பொட்டாசியம் தனியாகப் பயன்படுவதில்லை. மற்ற தனிமங்களோடு சேர்ந்த கூட்டுப் பொருளாக ஆகிய பின்னரே பெரும் பயன்தருகிறது.

பொட்டாசியம் குளோரேட் ஒரு ஆக்சிகரணியாகும். தீக்குச்சிகள் செய்யவும் பட்டாசு போன்ற வானவெடிகள் செய்யவும் பயன்படுகிறது. பொட்டாசியம் நைட்ரேட் வெடி மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. பொட்டாசியம் அயோடைடு வேதியியல் பகுப்புகளிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் புரோமைடு ஒளிப்படத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் பெர்மங்கனேட் தோல் தொழிலும் மரத் தொழிலிலும் சாயப்பொருளாகப் பயன்படுகிறது. மருந்துப் பொருட்களில் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. பொட்டாசியம் டை குரோ மைட் ஆற்றல் மிகு ஆக்சிகரணியாக இருப்பதால் தோல் பதனிட்டுத் தொழிலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. உலோகப் பொருட்களுக்குப் பளபளப்பூட்டும் குரோமியப் பூச்சுத் தரப் பெரிதும் பயன்படுகிறது. பொட்டாசியம் சயனைடு கொடிய நச்சுப் பொருளாகும். இதைக் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. பொட்டாசியம் புளோரைடைக் கொண்டு புளோரின் வாயு தயாரிக்கப் படுகிறது.

பொட்டாசியம் இவ்வாறு நம் வாழ்விற்கான பல்வேறு துறைகளிலும் பயன்படக் கூடிய இன்றியமையாப் பொருளாக அமைந்துள்ளது.


பொறியியல் : 'இன்ஜினியரிங்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துறையே தமிழில் பொறியியல் எனக் கூறப்படுகிறது. பொறியியலானது, எந்திரப் பொறியியல் (Mechanical Engineering) மின் பொறியியல் (Electrical Engineering) பொதுமைப் பொறியியல் (Civil Engineering) மற்றும் வேதியியல் பொறியியல் (Chemical Engineering) எனப் பலவாகும்.