பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னல்

243

மின் பகுப்பு மூலமே பல பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. தாமிர சல்பேட்டுக் கரைசலை மின் பகுப்புச் செய்வதன் மூலம் தாமிரம் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.

மின் பகுப்பின் துணைகொண்டு மின் முலாம் பூசப்படுகிறது. செம்பு, பித்தளை, இரும்பு போன்ற உலோகப் பொருட்களுக்கு நிக்கல், குரோமியம், வெள்ளி அல்லது தங்கப் பூச்சுக்கள் மின்பகுப்பு மூலம் பூசப்படுகிறது. நகைகள், கத்தி, கரண்டி போன்றவற்றிற்கும் கார் போன்ற வாகனங்களின் பகுதிகளுக்கும் இவ்வாறே மின் பகுப்பு முறையில் முலாம் பூசப்படுகிறது. இஃது அவற்றிற்குக் குறைந்த செலவில் அதிகக் காலத்துக்கு அழகான தோற்றத்தை வழங்க உதவுகிறது.


மின்னல் : இயற்கையாக வானத்தில் திடீரென தோன்றி மறையும் பேரொளியையே மின்னல் என்கிறோம்.

மின்னல்

முன்பெல்லாம் வானத்தில் மின்ன ல் தோன்றுவது தெய்வத்தின் செயற்பாடுகள் என மக்கள் நம்பினர். அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மின்னல் என்பது ஆற்றல் மிக்க மின்பொறியே என்ற கருத்து உருப்பெற்று நிலைத்தது. மின்னலுக்கும் மின்சாரத்துக்குமிடையேயுள்ள தொடர்பை முதன் முதலில் ஆய்ந்து அறிந்தவர் அமெரிக்க அறிவியல் அறிஞரான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஆவார். மின்சாரத்தால்தான் மின்னல் உருவாகி தோன்றி மறைகிறது என்பது அவரது கண்டுபிடிப்பாகும்.

மழைக்காலத்தில் உருவாகும் இடிமேகம் முழுவதுமே மின்னேற்றமடைகிறது. எதிர் மின்னேற்றம் பெற்ற மற்றொரு இடிமேகம் இதன் அருகே வரும்போது மின்னேற்றமுற்ற இரு மேகங்களுக்கிடையே திடீரென மின்சாரப் பொறி எழுகிறது. இதுவே இரு மேகங்களுக்கிடையே ஏற்படும் மின்னல். இதன் நீளம் மிக நீண்டதாகும். அவ்வாறே மழை மேகம் பூமிக்கருகில் வரும்போது மின் தூண்டலால் பூமி மின்னேற்றம் பெருகிறது. இவை இரண்டுக்கும் இடையிலுள்ள காற்று இரண்டும் மோதிக் கொள்ளாமல் தடுப்புச் சுவர் போல் காக்கிறது. காற்றுத் தடுப்பையும் மீறிச் சில சமயம் இடி மேகத்திற்கும் பூமிக்குமிடையே எதிர் மின்னேற்றம் காரணமாகப் பொறி எழும். இதுவே பூமிக்கும் இடிமேகத்துக்குமிடையே ஏற்படும் மின்னல் ஆகும். இது பார்ப்பதற்கு வளைந்து நெளிந்து செல்லும் கொடிபோல் தோன்றும் இவற்றின் நீளம் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக நீளமுடையதாகும்.