பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

முதுகெலும்பில்லா உயிரினங்கள்

காற்றாகிய கரியமில வாயுவை (கார்பன் டையாக்சைடு) நீரில் கரைத்து வெளியேற்றுகின்றது.

மீன்களின் இரத்தம் குளிர்ச்சித் தன்மை கொண்டதாகும். எனவேதான் மீனினம் குளிர் இரத்த உயிரினங்களைச் சார்ந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றின் நரம்பு மண்டலம் மற்ற விலங்குகளுக்கு இருப்பது போன்றே அமைந்துள்ளன. இவைகளும் பிற பிராணிகளைப் போன்றே வலி, நலக்குறைவு போன்றவைகளால் துன்புறுகின்றன.

மீன்களில் உணர்திறன் மிகக் கூர்மையானதாகும். சுவை, உணர்ச்சி ஆகியவற்றை தோல் மூலம் உணர்கின்றன. மோப்ப வாசனையை அறிய இவற்றின் தலையிலுள்ள மூக்குப் பகுதியில் இரு உணர்கொம்புகள் உள்ளன. மீன்களின் காதுகள் தலையுள் அமைந்துள்ளன. தலையில் பக்கத்துக்கு ஒன்றாக அமைந்துள்ள கண்களுக்கு இமைகள் இல்லை. ஆழ்கடல் மீன்களின் கண்கள் மிகச் சிறியவையாக இருக்கும். கடலின் அடிமட்டத்தில் வாழும் மீன்களுக்குக் கண்களே கிடையாது. மீனின் வாய் பெரிது. அதனுள் வளைந்திருக்கும் பற்கள் பற்றிப் பிடிக்கும் இரை வாயிலிருந்து தப்பிவிடாமலிருக்க உதவுகிறது.

சில மீன்கள் புதிய இடங்களை நோக்கிச் சென்றபடி சுற்றிக் கொண்டேயிருக்கும். இவற்றிற்கென குறிப்பிட்ட இருப்பிடம் ஏதும் இல்லை. ஆயினும், பெரும்பாலான மீன்கள் கூட்டம் கூட்டமாகவே தரைவாழ் உயிரினங்களைப் போல வாழும். பெரும்பாலான மீன்கள் தன்னொத்த சிறிய மீன்களையும் நீர் வாழ் ஜந்துக்களையும் புழு, பூச்சிகளையும் உண்டு வாழ்கின்றன. சில மீன்கள் கடல் வாழ் தாவரங்களை உண்டு வாழும்.

மீன்கள் நீரில் வாழ்வதற்கேற்ற வகையில் தங்கள் உடல் அமைப்பைப் பெற்றுள்ளன. முன்னும், பின்னும் சிறுத்தும் நடுப்பகுதி பருத்தும் ஒரு ஓடம்போல எளிதாக நீரில் நீந்திச் செல்ல இயல்கின்றது. இவற்றின் செதில்களில் ஒருவித வழவழப்பு நீர் சுரப்பதால் இவை, எளிதில் நழுவிச் செல்ல முடிகிறது.

மீன்கள் கடலின் அனைத்து மட்டங்களிலும் உயிர் வாழ்கின்றன. சாலமன் மீன்களின் வாழ்க்கை விந்தையானது. இவ்வகை மீன்கள் ஆறுகளில் எங்கோ பிறந்து கடலை அடைந்து வாழ்கின்றன. ஆனால் முட்டையிடும் பருவத்தில் மீண்டும் தன் பிறப்பிடமாகிய ஆற்றை அடைந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து பின் அங்கேயே மடிகின்றன. அதன் குஞ்சுகள் தாய் வழியில் வளர்ச்சி பெறக் கடலை நோக்கிச் செல்கின்றன. ஆனால், மலங்கு எனும் மீன் ஆற்றில் வாழ்ந்தாலும் முட்டையிடக் கடலுக்கே செல்கின்றன.

மீன்கள் மனிதர்களுக்கும் சிலவகைப் பிராணிகளுக்கும் நல்ல உணவாக அமைகிறது. ஆற்றிலும் கடலிலும் மற்றும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளிலும் வலைபோட்டும் தூண்டில் போட்டும் மீன் பிடிக்கிறார்கள். கடலில் கிடைக்கும் 'காட்’ போன்ற சிலவகை மீன்களின் கல்லீரலிலிருந்து எண்ணெய் தயாரிக்கிறார்கள். சத்துமிக்க இவ்வெண்ணெய் டானிக்காகப் பயன்படுகிறது. மீன்முள், செதில்களைக் கொண்டு கோழித் தீவனமும் உரமும் தயாரிக்கிறார்கள்.

மீன் தசையிலிருந்து எடுக்கப்படும் ‘மீன் எண்ணெய்' மாரடைப்பு நோயைத் தடுக்கும் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


முதுகெலும்பில்லா உயிரினங்கள் : உலகில் உள்ள உயிரினங்களில் முதுகெலும்பில்லா உயிரினங்களே மிக அதிகம். சுமார் பத்து இலட்சம் உயிரினங்களில் எட்டு இலட்சத்துக்கு மேற்பட்டவை முதுகெலும்பற்றவைகளேயாகும்.

முதுகெலும்பு இல்லாத உயிரினங்களைப் பல பகுதிகளாகப் பகுத்துள்ளனர் உயிரியலார். அவற்றுள் புரோட்டோசோவா எனும் ஒரே உயிரணுவால் இயங்கும் இனம் மிக முக்கியமானதாகும். மற்ற உயிரினங்கள், செய்யும் சுவாசித்தல், உணவுண்ணல் உணவைச் சீரணித்தல், எஞ்சும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் ஓரணுவுக்குள்ளாக இவை செவ்வனே செய்கின்றன. ஆனால், இத்தகைய ஓரணு உயிரினங்கள் அளவில் மிக நுண்மையானவைகளாக இருப்பதால் இவற்றை நுண்பெருக்காடி மூலமே காண இயலும். இவை நுண் உயிரினமாக இருப்பினும் இவற்றில் சிலவற்றின் மேற்பகுதி சற்று கடினத்தன்மை கொண்ட ஓடுகளால் அமையப் பெற்றவையாகும். இறந்த இந் நுண்ணுயிர்களின் தொகுதியே கடலில் கிடைக்கும் சீமைச் சுண்ணாம்பு ஆகும். புரோட்டோசோவா உயிரினங்கள் ஒவ்வொன்றும் இரண்