பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

சிறார் முதல் முதியோர்வரை அனைவர் வாழ்விலும் அறிவியலின் தாக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வையும் நகர்த்த முடியா நிலை. எனவே. அன்றாட வாழ்வில் இழையோடிக் கொண்டிருக்கும் அறிவியல் அறிவை, உணர்வை, சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் பெற வேண்டியது இன்றியமையாததாகும். இதற்கு உறுதுணையாக அமையும் வண்ணம் கண்கவர் அறிவியல் நூலாக வெளிவருகிறது ‘இளையர் அறிவியல் களஞ்சியம்’ எனும் இந்நூல்.

முன்பு. தமிழ் வளர்ச்சிக்கழகம் ‘கலைக் களஞ்சிய’த் தொகுதிகள் பலவற்றை வெளியிட்டுள்ளது. ‘இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக வெளிவந்த கலைக்களஞ்சியங்கள்’ என்னும் பெருமை பெற்றன இவை பெரும்பாலும் பெரியவர்கள் பயன்படுத்தத்தக்கனவாகவே இத்தொகுதிகள் அமைந்தனவெனலாம், பின், அதே தமிழ் வளர்ச்சிக் கழகம் சிறுவர்களுக்கான பொதுவான குழந்தைகள் கலைக்களஞ்சியங்களை வெளியிட்டுப் பெருமை பெற்றது. இவை அனைத்துத் துறைத் தகவல்களையும் உள்ளடக்கியவை. அவற்றில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டவைகளாகும். கால் நூற்றாண்டுக்கு பின்பு அறிவியல், சமூக, வாழ்வில் எத்தனையோ புதுமைகள் பூத்து புது மணம் பரப்பியுள்ளன. காலப்போக்கில் எத்தனையெத்தனையோ மாற்ற திருத்தங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆயிரமாயிரம் புதுக் கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டு அவை மக்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைத்துவிட்டன.

எனவே. இன்றைய சூழ்நிலைக்கேற்ப புதிய செய்திகளை உட்கொண்டு ‘கலைக் களஞ்சியங்கள்’ வெளிவர வேண்டியது அவசிய, அவசரத் தேவையாகிறது. இக்குறையை நிறைவு செய்யும் வகையில் கலைக் களஞ்சியங்களை ‘வாழ்வியல் களஞ்சியம்’, 'அறிவியல் களஞ்சியம்' என இரு பெரும் பிரிவாகப் பிரித்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகின்றது.

தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியங்கள் இதுவரை ஒரு சில தொகுதிகள் வெளிவந்திருந்தாலும் அவை பெரியவர்களை மனதிற் கொண்டு உருவாக்கப்பட்டவைகளாகவே உள்ளன. எனவே, சிறுவர்