பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


இங்கு முக்கியமான ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இறைவனின் இறுதித் தூதராகிய நாயகத் திருமேனி அவர்களையும் இறுதி வேதமான திருக்குர்ஆன் திருமறையையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். ஆனால், இறுதித் தூதருக்கு முந்தைய நபிமார்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட வேதங்களையும் ஒப்புக் கொள்கிறார். இங்குப் பயன்படுத்தப்படும் ஏற்றுக் கொள்ளல், ஒப்புக் கொள்ளல் என்ற இரு சொற்கள் உணர்த்தும் உட்பொருளை நன்கு உணர வேண்டும். இதை எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு எளிமையான உதாரணம் மூலம் அறியலாம். ரயில் பயணம் மேற்கொள்ளும் ஒருவர் இன்று நடைமுறையிலுள்ள நேர அட்டவணைப்படி, அதைப் பின்பற்றி ரயிலுக்குச் சென்று பயணம் மேற்கொள்கிறார். அவர் பழையதான, முந்தைய நேர அட்டவணையைப் பின்பற்றுவதில்லை. ஏனெனில், அவ்வட்டவணை மாற்ற திருத்தங்கட்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அவ்வட்டவணை ரயில் நேரம் அறிவதற்கோ அல்லது பயணத்தை மேற்கொள்வதற்கோ நாம் பயன் படுத்துவதில்லை ஆயினும், மாற்ற திருத்தங்கட்கு உட்பட்டதாயினும் பிந்தைய அட்டவணை இல்லை என்றாகி விடாது. முன்பு இருந்த அட்டவணையை ஒப்புக் கொள்கிறோம். நடைமுறையிலுள்ள இன்றைய அட்டவணையை ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறோம்.

இதேபோன்றுதான் முன்னர் இறைவனால் மக்களுக்கு இறைநெறி புகட்டி வழி நடத்த வந்த நபிமார்களையும் அவர்கட்கு இறைவனால் அளிக்கப்பட்ட இறை வேதங்களையும் ஒரு முஸ்லிம் ஒப்புக் கொள்கிறார். ஆனால், இறைவனின் இறுதித் தூதராக வந்த நபிகள் நாயகம் அவர்களையும் அவர்கட்கு இறைவன் நல்கிய இறுதி வேதத்தையும் ஒரு முஸ்லிம் முற்றாக ஏற்றுப் பின்பற்றுகிறார். இதன்மூலம் அவர் முழுமையான முஸ்லிமாகிறார்.