பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

எத்தகையது என்பதை எளிதாகப் புரிய வைத்துவிட்டார் நாயகத் திருமேனி அவர்கள்.

இஸ்லாம் பிற பிற சமயங்களை வெறுத்து ஒதுக்காத தோடு அவற்றை மதிக்கக் கூடியது என்பதை மாற்றுச் சமயவாதிகளாகிய பாதிரியார்களையே உணர்ந்து தெளிய வைத்து விட்டது.

         “இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும்
          எதிரானது அன்று”

என்பது நாயகத் திருமேனியின் வாக்கமுதாகும்.

ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பி ஏற்ற சமயக் கொள்கைகளைப் பேணி வாழ முழு உரிமை உண்டு என்பதை இஸ்லாமும் அண்ணலாரின் அழகிய முன்மாதிரியான வாழ்க்கையும் வாக்கும் எல்லா வகையிலும் உறுதி செய்கின்றன. இதனைக் கடந்தகால இஸ்லாமிய ஆட்சி வரலாறும் உறுதி செய்கிறது.

இந்தியாவில் ஐந்நூறு ஆண்டுக் காலத்திற்கு மேல் இஸ்லாமிய ஆட்சி நடத்திய முஸ்லிம் மன்னர்கள், மாற்றுச் சமயத்தவர்களின் வாழ்க்கை முறையிலோ சமயச் சார்பான சடங்கு, சம்பிரதாயங்களிலோ தலையிட்டதாக வரலாறே இல்லை. இதற்கான சிறு சம்பவத்தைக்கூட வரலாற்று ஏடுகளில் காண முடியவில்லை. பிற சமயத்தவர்களின் வழக்குகள் அந்தந்தச் சமயத்தைச் சார்ந்த நீதிபதிகளை, சமய ஞானமிக்க வல்லுநர்களைத் துணையாகக் கொண்டே விசாரிக்கப்பட்டன. அந்தந்த மத அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டன என்பதுதான் வரலாறு. பிற சமயத்தவரின் மதப் பிரச்சினைகளில் முஸ்லிம்கள் தலையிடக் கூடாது என்பது நாயக வழிமுறையும் இஸ்லாமிய நெறியுமாகும்.