பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121

எனக் கூறுவதன் மூலம் இஸ்லாமிய நெறியை ஏற்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய விருப்பத்தைப் பொருத்ததேயன்றி கட்டாயத்தின்பாற்பட்டது அன்று. அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் இத்தகைய உணர்வையே ஊட்டி வருகிறது.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் கிளப்பிவிட்ட ஒன்றே "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது” என்ற மிகத் தவறான குற்றச்சாட்டு. அதிலும் இந்திய வரலாற்றை எழுத முனைந்த ஸ்மித் போன்ற ஆங்கிலேயர்கள் இந்திய மக்களை பிரித்தாலும் சூழ்ச்சிக்காக வரலாற்றுப் போர்வையில் கட்டிவிட்ட கற்பனையே வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற கற்பனை வாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே நாட்டினர் - இந்தியர் என்ற முறையில் ஒன்றிணைய விடாமல் அவர்களிடையே பிணக்கும் பிரிவும் என்றென்றைக்குமாக இருக்க வேண்டும் என்ற தீய உணர்வின் அடிப்படையில் உருவானதே இந்த வாதம்.

இந்திய வரலாற்றை நடுவு நிலையில் ஆராய்ந்து பார்த்தால் இது எவ்வளவு தீய திட்டமிட்ட தவறான வாதம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளியப் புலப்படும்.

இந்தியாவிற்குள் இஸ்லாமியர்கள் கால்வைத்த காலத்திலிருந்து இன்றுவரை அவர்களின் வரலாற்று ஏடுகளைப் புரட்டி பாருங்கள், எங்காவது ஒரு இடத்தில் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள் அல்லது வணிகர்களாக வந்த அவர்கள் தங்கள் செல்வம், செல்வாக்குகளைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்குள் இழுத்து வந்தார்கள் என்பதற்கு நேரடி அல்லது மறைமுகச் சான்றுகள் எதையாவது காட்ட முடியுமா?