141
எனவே, இஸ்லாமியப் பிரச்சாரம் என்பது பேசி, எழுதி புரியவைப்பதைவிட, நம் வாழ்வில் முழு வீச்சில் இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, மற்றவர்களின் கண் முன்னே முன் மாதிரியாக வாழ்வதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரம்
இஸ்லாமிய வாழ்வியல் நெறி முறைகளை பிசிறில்லாமல் கடைப்பிடித்து வெற்றி பெறுவதற்கு மாறாக, இன்று இஸ்லாத்தில் இல்லாதது மட்டுமல்ல, இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாறான, இன்னும் சொல்லப் போனால் அனாச்சாரமான தீய பழக்க வழக்கங்களை இன்று இஸ்லாத்தின் பெயரால் கடைப் பிடித்து, இஸ்லாமிய நெறிகளுக்குத் தீங்கிழைத்து வருகிறோம்.
அத்தகைய சமூகத் தீங்குகளில் இஸ்லாமிய சமுதாயம் கடைப்பிடித்து வரும் வரதட்சணை எனும் கைக்கூலியும் ஒன்றாகும். மணமகன் 'மஹர்' எனும் மண அன்பளிப்புத் தொகையை மணமகளுக்கு வழங்கிய பின்னரே மண வினை நிறைவேறும் என்ற இஸ்லாமிய முறைக்கு நேர் மாறாக மணமகள் வீட்டாரிடமிருந்து பணமாகவும் நகையாகவும் வாகனமாகவும் சீதனமாகவும் பெரும் பொருளைக் கட்டாயமாக வாங்கும் நிலை இருந்து வருகிறது. இஃது நிறுத்தப்பட வேண்டியது மட்டுமல்ல வேரும் வேறடித்தூறுமாகக் களையப்பட வேண்டிய சமூகத் தீங்காகும்.
அண்ணலார் இல்ல அழகிய முன் மாதிரி திருமணம்
மண்ணுலக மக்களுக்கு என்றென்றும் வாழும் சான்றாக, அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய நாயகத் திருமேனியின் இல்லத் திருமணம் எவ்வகையில் நடந்தது? இதை அழகியதொரு எழிலோவியமாக உமறுப் புலவர் சீறாப் புராணப் பெருங்காப்பியத்தில் சொல்லோவியமாக வரைந்து காட்டுகிறார்.