பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177


பெருமானார் (சல்) அவர்களின் பேச்சும் செயலும் அம்முரடனின் மனதை வெகுவாக நெகிழச் செய்துவிட்டது. தன் செயலுக்காக வெட்கமும் வேதனையும் அடைந்தான். மனித நேயத்தின் சிகரமாக இருக்கும் இம் மாமனிதரைத் தவறாக எண்ணியதற்காக மனதிற்குள் குமைந்தான். தன் செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டான். இஸ்லாத்தில் இணைந்து தன்னையும் மனிதப் புனிதனாக மாற்றிக் கொண்டான். இச் செயல் மனித நேயத்திற்கோர் மகத்தான சான்றாக இன்று அண்ணலார் வாழ்வில் மின்னிக் கொண்டுள்ளது.

ஆட்டுப்பால் கறந்த அண்ணலார்

ஒருமுறை குடும்பத் தலைவர் ஒருவர் இஸ்லாமியக் காரியமாக மற்றவர்களுடன் வெளியூர் சென்றுவிட்டார். அந்த வீட்டின் வருமானத்துக்கு ஆதாரமாக பால்கறக்கும் சில ஆடுகள் இருந்தன. அக்குடும்பத் தலைவருக்குப் பால் கறக்கத் தெரியும். ஆனால், அவரது மனைவிக்குப் பால்கறக்கத் தெரியாது. இந்நிலையில் அக்குடும்பத் தலைவர் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் ஆடுகளிடம் பால்கறக்க வழி தெரியாது திகைத்த அவர் மனைவி, அண்ணலாரை அணுகி தாங்கள் ஆடுகளிடம் பால்கரந்து தந்து உதவ வேண்டும் என வேண்டினார். அவரும் அவ்வாறே பால்கரந்து உதவினார். தொடர்ந்து அப்பெண் தன் கணவர் வெளியூரிலிருந்து திரும்பும் வரை தொடர்ந்து பால் கரந்து தந்து உதவுமாறு வேண்ட, பெருமானார் (சல்) அவர்களும் அவ்வாறே பால் கரந்து உதவினார் என்பது வரலாறு. இந்நிகழ்ச்சிகளெல்லாம் மனித நேயத்தை ஒவ்வொருவரும் எவ்வாறு பேணி நடந்து, இறையுவப்புக்கு ஆளாக வேண்டும் என்பதற்கு வாழும் சான்றுகளாகும்.

மனச்சுமை இறக்கிய மாநபி

மற்றவர்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்பது மட்டு