பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

209


சமுதாயத்தில் இன்னும் பெண் கல்வி பின் தங்கியதாகவே உள்ளது. ஒரு ஆணை விட, பெண் படித்தால் அக் குடும்பத்திலே விரும்பத்தக்க மாற்றங்கள் விரைந்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஒரு பெண் படித்தவளாக இருந்துவிட்டால், அவள் சந்ததி முழுவதும் கல்வி எனும் ராஜபாட்டையிலிருந்து ஒரு அங்குலம்கூட விலக இயலாது. குடும்பத்தின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்படுவது எளிதாகி விடும். குடும்பத் தலைவன், தலைவியாகிய ஆணும் பெண்ணும் கல்வி கற்றவர்களாக அமைந்து விட்டால் அக்குடும்பத்தின் அகவாழ்விலும் புறவாழ்விலும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட, வெற்றியின் உச்சத்தை நோக்கி அக்குடும்பம் செல்வதை யாரும் தடுக்கவியலாது.

அக, புற மாற்றங்களுக்கு அடிப்படை

எனவே, மாற்றத்திற்கு அடிப்படை அம்சம் கல்வியாகும். கல்வி வளர்ச்சியே அக, புற மாற்றங்களுக்கு அடிப்படை. இதை நாம் நன்கு உணர்ந்து தெளிய வேண்டும். இறைவன் மிகத் தெளிவாகத் தன் திருமறையில் 'நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதற்கு நான் துணையிருப்பேன். உங்கள் நற் செயல்களால், நீங்கள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றால் நானும் உரிய மாற்றத்தை ஏற்படுத்த மாட்டேன்’ எனக் கூறுவதிலிருந்து நம் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முதல் பங்களிப்பு நம்மிடமிருந்துதான் வர வேண்டும்.


இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் வல்ல அல்லாஹ் அளித்துள்ள அறிவைக் கொண்டு நாம் நான்கு தப்படி எடுத்து வைத்தால் வல்ல அல்லாஹ் பதினாறு தப்படி எடுத்து வைப்பதற்கான உத்வேகத்தையும் ஆற்றலையும் அளிக்கிறான். மாறாக, நாம் எதுவுமே முன் முயற்சி எடுக்கவில்லையென்றால் இறைவன் நமக்காக