பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

229



தரும் ஆன்மீகக் கருத்துகளையெல்லாம் அவர் கால வழக்குச் சொற்களைக் கொண்டே மதங்கடந்த முறையில், இனங்கடந்த நிலையில் எல்லோர் உள்ளமும் ஏற்கும் வண்ணம் எடுத்துக்கூறிய மாபெரும் ஆன்மீகச் செல்வராவார். குணங்குடி மஸ்தான் எனும் பெயரில் உள்ள குணங்குடி என்பது அவர் ஊரும் அல்ல; மஸ்தான் என்பது அவரது பெயருமல்ல. ‘குணங்குடியார்’ எனக்கூறுவது நற்குணங்களெல்லாம் ஒருங்கே குடிகொண்டிருக்கும் இறைவனைக் குறிக்கும் சொல்லாகும். இறைவனிடத்திலேதான் நற்குணங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக அமைந்திருக்கும். குணத்தைப் பொறுத்தவரை நாமெல்லாம் குறையுடையவர்கள். அக்குறையை நீக்கிக் கொள்வதற்காகத்தான், இறைநெறியிலே பெருமானார் (சல்) வாழ்ந்து காட்டிய வழிமுறைகளையெல்லாம் தெரிந்து, அந்தக் குறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் களைந்து, குறையறிந்தவர்களாக நாமெல்லாம் வாழ்வில் உயர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

குணங்குடி என்பது போன்றே ‘மஸ்தான்’ என்பதும் அவரது பெயர் அல்ல. அவரது இயற்பெயர் சுல்தான் அப்துல் காதர் என்பதாகும். பிறகு ஏன் ‘மஸ்தான்’ என்று அழைக்கப்படுகிறார். ‘மஸ்து’ எனும் சொல்லினடியாக அமைந்துள்ளது ‘மஸ்தான்’ என்ற பெயர். மஸ்து என்பது பாரசீகச் சொல்லாகும். அதற்கு 'இறை மயக்கம்’ என்பது பொருளாகும். சூஃபிகளாகிய மெய்ஞ்ஞானிகள் இரவு பகல் எந்நேரமும் இறையுணர்வில் - இறை மயக்கத்திலேயே இருப்பவர்கள். அவர்கள் உள்ளத்தில் எந்நேரமும் இறைச் சிந்தனையே ஒளிர்ந்து கொண்டிருக்கும். அந்த இறை உணர்விலே - இறை மயக்கத்திலே தான் ஆன்மீக ஞானம் பொங்கிப் பொழிய முடியும். ஆகவேதான், அத்தகைய மஸ்தையுடையவர்கள் மஸ்தானாக அழைக்கப்படுகிறார்கள்.