267
இஸ்லாத்தை அறியப் பேரார்வம்
என்றுமில்லாத அளவுக்கு பிறசமயச் சகோதரர்கள் இஸ்லாத்தை அறியவும் ஆராயவும் முற்பட்டுள்ளனரே ஏன்?
இன்று உலகெங்கும் வாழும் படித்தவர்கள், அறிவாளிகள், அறிவியல் வல்லுநர்கள் குறிப்பாக மேற்குலகைச் சார்ந்த சிந்தனையாளர்கள் இன்று சமுதாய உணர்வோடு அறிவியல் சிந்தனையுடன் விஞ்ஞான பூர்வமாக இஸ்லாத்தை காணவும் ஆராயவும் முற்பட்டுள்ளனர் என்பதுதான் உணமை.
இன்றையச் சூழலில் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு அண்ணலார் மூலமும், அவர் மூலம் இறைவன் வெளிப்படுத்திய திருமறையின் வாயிலாகவும் தீர்வுகாண முற்படுகின்றனர். இதை ஒருவகை விழிப்புணர்வு என்றே கூறலாம்.
இச்சந்தர்ப்பத்தில் நாம் பெறவேண்டிய, நம்முன் உள்ள பொறுப்புகள், கடமைகள் என்ன என்பதையும் இந்நேரத்தில் சிந்திக்கவும் செயல்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம்
பெருமானார் பிறந்தநாள் விழாவிலே கலந்து கொள்ளும் நாம், இறுதி நபி இறுதி வேதம் வழி வாழ்ந்து காட்டிய ‘அழகிய முன்மாதிரி'யான வாழ்வியல் நெறி முறைகளை நினைந்து, அதன்படி வாழ உறுதி கொள்கிறோம். அதற்காக வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி 'இறை நெறி பேணும் எங்களுக்கு வெற்றியைத் தர' வேண்டுகிறோம்.
பிறர் கண்ணோட்டம் என்ன?
இதே சமயத்தில் மற்றொன்றைப் பற்றியும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம்மைச் சுற்றி வாழ்வோரில் ஒரு சிலர் நம்மைப்பற்றி, நாம் பேணி வாழும் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பற்றி என்ன கருதுகிறார்கள், அவர்கள் கண்ணோட்டம் என்ன என்பதைப் பற்றியும் நாம் கருதிப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.