பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312


இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேல் சீரிளமைத் திறம் குன்றாமலிருப்பதற்கு அடித்தளக் காரணம் என்ன? ஆழமும் அழுத்தமும் நிறைந்த வேர்ச் சொற்களையுடைய மொழியாகத் தமிழ் திகழ்வதே இதற்குக் காரணம். உலகிலேயே மிக அதிகமான வேர்ச் சொற்களையுடைய மொழியாகத் தமிழ் திகழ்கிறது என்கிறார் மொழியியல் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எமினோ அவர்கள். அவரது அறிவார்ந்த ஆய்வு எந்த அளவுக்கு உண்மை என்பதை கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக நான் மேற்கொண்டு வரும் சொல்லாக்கப்பணி மூலம் மிக நன்றாக உணர்ந்து வருகிறேன். பல்லாயிரம் கலைச் சொற்களை உருவாக்கி, சுமார் ஐந்து கலைச் சொல் களஞ்சிய அகராதிகளை உருவாக்கியபின் எனக்குள் எழும் அழுத்தமான உணர்வு தமிழ் காலத்திற்கேற்ற மொழி, காலத் தேவையை முழுமையாக நிறைவு செய்யவல்ல மொழி என்பதேயாகும்.

அறிவியல் மொழி தமிழ்

ஒரு மொழி இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழும் பெற்றியினைப் பெற்றுள்ளதென்றால் அஃது மாறி வரும் காலப் போக்கில் எத்தகைய போக்குக்கும் தேவைக்கும் ஈடு கொடுக்க வல்ல மொழி என்பதையே காட்டுகிறது. சங்க காலத்திற்கு முன்பு சமயத் தாக்கமே இல்லாத மொழியாக, அறிவியல் சார்ந்த மொழியாக இருந்தது. சங்க காலத்தில் சமுதாய மொழியாக மாறியது, பின்பு வைதீக சமயம், சமண, பெளத்த சமயம், வெளி நாட்டிலிருந்து சொராஸ்டிரியம், கிருஸ்தவம், இஸ்லாம் போன்ற சமயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வர, அவ்வச் சமய மொழியாக உருமாறி வளர்ந்தது. ஆங்கிலேயர்களின் வரவால் மேலை நாட்டுப் புதினம், சிறுகதை, திறனாய்வு போன்ற துறைகளாகப் பரிணமிக்க தமிழ் தவறவில்லை. இன்று அழுத்தமாக உருவாகி உறுதியாக நிலை பெற்றுள்ள அறிவியல் ஊழிக்கு உகந்த மொழியாகத் தமிழ் வளர வேண்டிய காலக் கட்டாயம்.