பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86


நம்மைப்பற்றி நமக்கே தெரியா நிலை

ஆனால், நாம் எத்தனை பெருமைக்குரியவர்கள் என்பது நமக்கே தெரியாத ஒன்று. தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழைப் பொருத்தவரை நாம் வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள். வரலாறு படைத்தவர்கள். ஆனால், நாம் யார்? எத்தகையவர்கள்? என்பது நமக்கே மறந்து போய்விட்டது. நாம் யாரென்று நமக்கே தெரியவில்லை. ஆனால், அதுதான் உண்மை.

தமிழைக் காத்தவர்கள் தமிழ் முஸ்லிம்கள்

தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரை ஒரு கால கட்டத்தில் அழிவை நோக்கிச் சென்ற தமிழ், இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டது. அன்றைய தமிழகத்தின் அரசியல் நிலை என்ன? தமிழகம் முழுமையும் விஜய நகர் சாம்ராஜ்ய ஆட்சியின் கீழ் வந்துவிட்டது. தமிழ் நாட்டின் பெரும்பகுதி நாயக்கர்களின் - பாளையக்காரர்களின் ஆட்சியின் கீழ் அல்லல்பட்டது. அரசு மொழி தெலுங்கு. தமிழகத்தின் மற்றொரு பகுதி நவாபுகளின் ஆட்சியின்கீழ் இருந்த பகுதிகளில் உருதுமொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. தஞ்சைவரை ஆண்ட மகாராஷ்டிரர்கள் ஆட்சியில் மராட்டி மொழி. அதையடுத்து ஆங்கிலேயர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், ஸ்பானியர்கள், டேனிஸ்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் இன்னும் எவனுக்கெல்லாம் கப்பல் கிடைத்ததோ அவனெல்லாம் தமிழ்நாட்டை அபகரித்து ஆளத் தொடங்கிய காலகட்டம். அவர்களின் ஆட்சிக்குட்பட்ட ஐரோப்பிய மொழிகளின் செல்வாக்கு வேறு. எங்கும் பரவியிருந்த ஹிந்து சமயப் போர்வையில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கம். தமிழுக்கோ எங்குமே இடமில்லை என்ற துயர நிலை. தமிழ் மொழியை ஆதரிக்க எந்த மட்டத்திலும் ஆளே இல்லாத நிலை. இந்த நிலையில் தமிழ் புலவருலகம் அறவே ஆதரிப்பாரற்று தேய்பிறையாக உருமாறியிருந்தது. "ஏ, மன்னா! இதைப் பாடியிருக்கிறேன்