இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கலைமான் ஒன்று காட்டினிலே.
கடுமை யான வெய்யிலிலே,
அலைந்து சுற்றித் திரிந்ததுவே;
அதிகத் தாகம் கொண்டதுவே.
அருகில் இருந்த ஓடைதனை
அடைந்தது, தண்ணீர் அருந்திடவே.
உருவம் நீரில் தெரிந்திடவே,
உற்றே அதனைப் பார்த்ததுவே.
தண்ணீர் தன்னில் அழகுடைய
தனது கொம்புகள் தெரிந்திடவே,
“என்னே அழகு, ஆஹாஹா!
எனது கொம்புகள்!” என்றதுவே.
கொண்டது பெருமை; அப்பொழுதே
கோபம் வந்தது கால்களின்மேல்.
“கண்டவர் இகழ அழகின்றிக்
கால்கள் நான்கும் உள்ளனவே!
ஈசன் தந்தான் அழகுடைய
இரண்டு கொம்புகள், ஆயினுமே,
மோச மான கால்களினால்
மிகவும் கேவலம் ஆகிறதே!”
31