சு. சமுத்திரம்
183
"டாக்டர்கிட்டே போகலாமா"
“வேண்டாம். இப்போ தேவலை." "இனிமேல் பக்கத்து வீட்டுக்காரர்கிட்டே ராத்திரியெல்லாம் அரட்டை அடிங்கோ- அப்புறம் சொல்றேன்... அந்த ஆள்கிட்டே பேசிப் பேசியே ஒங்க எனர்ஜி வேஸ்டாப் போகுது.... என்ன மனிதரோ, யாரும் ஆளில்லாதபோதுகூட அவர் வாய் பேசிக்கிட்டேதான் இருக்குது..."
“மற்றவங்களைப் பற்றி நமக்கென்ன பேச்சு..."
"அதுவும் சரிதான்... ஆமா.-- முடிவெட்டப் போறதில்லையா... என்னை மாதிரியே கொண்டை வச்கக்கப் போறீங்களா?"
அவள், அவன் தலையைச் செல்லமாகக் கோதிவிட்டாள், அவன் தன் தலையை மேலே மேலே உயர்த்திக் கொண்டு போனபோது, அவள் உம் என்று அதட்டினாள். அவன் அவள் முதுகை இறுகப் பிடித்தபடியே சிணுங்கினான். அந்த இறுக்கத்திலும், செல்லக் கிறுக்கிலும் மெய்மறந்து போன அவள், தன் மடியை ஆட்டி, அவனைத் தாலாட்ட, அவன் தொட்டில் குழந்தையாகித் தூங்கிப் போனான்.
மறுநாள் காலையில், அலுவலகம் புறப்பட்ட கணவனிடம், வாசலுக்கு வெளியே வந்து சின்னஞ்சிறு சூட்கேஸைக் கொடுத்தாள். ஆறு வீடுகளை வரிசையாகக் கொண்ட அந்தக் குடியிருப்பு வராந்தாவை அப்பாத்துரை கடந்து கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் பெட்டி படுக்கை யோடு டிரைவர் போய்க் கொண்டிருந்தான். அவளுக்கு என்னவோ போலிருந்தது. இப்படி நெடு நாள் டூர் போகும்போது, வீட்டுக்கு வந்து சொல்லிவிட்டுப் போகிறவர்.