பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


ஒருவரை யொருவர் தாழ்த்திப் பேசியும்
பொருதும், வாயாற் பொல்லாங் குரைத்தும்

ஆரிய நாடுவிட் டழகுறு தமிழகத்
தேறிய பார்ப்பனர் எதிர்வரக் கண்டால்

‘சாமி!’ எனத்தலை தாழ்த்தி வணங்கியும்,
ஊமைகள் போல ஒதுங்கி நடந்தும்,

தன்மதிப் பிழந்தும் புன்மதி கொண்டும்
தன்னிலை குன்றி நாய்போல் உழன்றும்,

வாடும்நாள், வாழும் வகையினை அறிஞர்
தேடும்நாள் அறிஞரைத் தேற்றுதற் கென்று,

தமிழறம் பேணும் தகைமை யாளர்!
அமைதியாய்ச் சிந்தித் தறியும் மாண்பினர்!

வள்ளுவர் நெறியை வாழ்க்கையிற் காட்டும்
தெள்ளிய உள்ளச் செவ்வி யுடையார்!

உளம்சொல் உடலால் உவப்புறும் பணியை
இளமைப் பொழுதிலும் வளர்தமிழ் நாட்டுக்கு
 
அளித்த வள்ளல்! அஞ்சாச் சிங்கம்!
உழைப்பின் பயனை விழையாச் செல்வன்!

சிந்தனைச் சிற்பி! திராவிடத் தந்தை!
வந்தனைக் குரிய வடிவிற் பிறந்தார்!

ஈரோட்டுத் தாத்தா! தமிழர்
பாராட்டும் பெரியார் இராம சாமியே!