முன்னுரை
உடற் கல்வி என்பது இன்றைய மக்களின் உயிர்க் கல்வியாக, உயர்கல்வியாகத் திகழ்ந்து வருகிறது.
உலக மக்களை உருவாக்கவும், உயர்த்தவும், உன்னதமான ஆக்கப்பணிகளில் உளமார இணையவும், மிளிரவும் உடற்கல்வி உதவுகிறது என்பது உலகமறிந்த உண்மைதான்.
என்றாலும், உடற்கல்வி என்பதை படித்த நம் நாட்டு மக்களும், பேரறிவாளர்களும்கூட பலவாறாகப் பழித்தும் இழித்தும் பேசுகின்ற பரிதாப நிலை பரவலாகப் பரந்து கிடப்பதை பார்த்து, நான் பெருமூச்செறிந்த நேரங்கள் நிறையவே உண்டு.
உன்னதமான உடற்கல்வியைப் பற்றி, நம் மக்களுக்குத் தெளிவாக விளக்கி எழுத வேண்டும் என்று பல முறை முயற்சிகளை மேற்கொண்டதும் உண்டு,
எவ்வளவு எளிதாக எடுத்துரைத்தால், இனிதாக மக்கள் இதயத்தில் பதியும் என்று என் மனதுக்குள்ளே போட்டு, செப்பமிட்டுக் கொண்டிருந்தேன்.
அந்த நிலைமைக்குத் தேர்ச்சி பெற, அதற்குள்ளேயே என்னையும் ஆட்படுத்திக் கொண்டேன். ஆரவாரித்துக் கொண்டிருந்த ஆசைகள், இன்று விடுதலை பெற்று வெளியாகி, களித்துக் களிநடம் புரிகின்றன.