இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
116
உணர்வின் எல்லை
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழாரும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கிரனாரும் பாடியுள்ள புறப்பாடல்களின் பகுதிகளாகும் இவை இரண்டும்.
பகலவனிடத்தும் பால் மதியத்தின்பாலும் ஈடுபாடு கொண்டிருந்தது போலவே, நீலவானத்தில் அள்ளியெறிந்த நித்திலங்களென ஒளி உமிழும் விண்மீன்களுக்கும், மன்பதை உய்யப் பொய்யாது பெய்யும் மாமழைக்கும் பழந்தமிழ்ப்புலவர் தம் நெஞ்சைக் காணிக்கையாக்கியிருந்தனர். அதனால், தம் நெஞ்சில் நீங்காதுறைந்த நற்றமிழ்ச் செல்வரை நலமுறப் போற்றும்போதும், 'எண்ணற்ற விண்மீன்கள் போலவும், தண்ணிய மாமழை போலவும் பன்னெடுங்காலம் வாழ்வீராக!' என வாழ்த்தினர்.