228 ✲ உத்தரகாண்டம்
நடையில் சோர்வு. எப்போதும் போல் சிரிப்பு இல்லை; பொங்கி வரும் பெருமிதம் இல்லை. வந்து வராந்தா திண்ணையோரம் குந்துகிறான்.
“ஏம்பா, சோர்வா இருக்கிற? நீ இப்படி இருந்து நா பார்க்கலியே?”
“தல நோவுதும்மா. டீ வாங்கிக் குடிச்ச. மருந்து கடக்காரரு ஒரு மாத்திரை குடுத்தாரு. கேக்கல...”
“ஏம்பா..? உங்களப் பாத்தாலே இருக்கிற துக்கம் பறந்து போகும்? பனி வெயிலோ?...”
“இன்னாவா? வூட்லே ஆரும் இல்ல. மன்சே செரியில்லீங்க.”
“ஏ, உங்க சம்சாரம் இல்லியா?”
“அவ மவன் வூட்டோடு போயி குந்திகினா...”
“ஓ, மகனுக்குக் கலியாணம் ஆயிட்டுதா?”
“ஒரு புள்ளயும் கீது!”
“மகன் வேலையாயிருக்கிறாரா?”
“கீறாரு. இன்சினிரு வேல...”
“அப்ப சந்தோச சமாசாரம்தான். நீங்க எம்புட்டுக் கஷ்டப்பட்டு, பொண்ணு புள்ளயப் படிக்க வச்சி ஆளாக்கி நல்ல நெலமைக்குக் கொண்டாந்திருக்கிய? பொண்ணு பெரி...ய ஆஸ்பத்திரில வேல பாக்குது, அப்பாவுக்கு ஒடம்பு ‘சுகமில்லன்னா, பாக்காதா?”
அவன் பேசவில்லை. சிறிது நேரம் மெளனம்.
“அம்மா, உங்களக் கும்புடுட்டுக்கிற. நாங்கூட எத்தினியோ தபா நெனச்சிட்டுகிற. இந்தம்மா, அமைச்சர் புள்ளிய வுட்டு, இப்டீ வந்து குந்தினுகிதேன்னு. பொண்ணாவுது, புள்ளியாவுது!”