பக்கம்:உத்தரகாண்டம்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28   ✲   உத்தரகாண்டம்


நானும் அந்த வயசில் பெற்றோரை எதிர்த்துப் போனேன். எனக்குப் பதினாறு வயசில், சரோஜாவைக் கல்யாணம் செய்து வைத்தாங்க. அப்ப அவளுக்குப் பன்னிரெண்டு வயசு. சொந்த பந்தமுள்ள குடும்பம்தான். சொத்து பத்து, வியாபாரம்னு சம்பந்தம் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு இல்லாத உயர்ந்த படிப்பு நான் படிக்கணும்னு சேர்த்தாங்க. ஆனா, அவங்க என்னை மேல் நாட்டுக்குக் கல்வி பயில அனுப்பி வைத்து வெள்ளைக்காரன் மெச்ச பதவி அடையணும்னு நினச்சது நடக்கல. காந்தி வந்திட்டார். படிப்பை விட்டுப் போராட்டம். பிறகு தொடர்ந்து வக்கீல் படிப்பு. சட்ட மறுப்பு, சத்யாக்கிரகம்னு, முழுசுமாக மாறிப் போச்சு. சரோஜாவுடன் பேசியது கூட இல்லை. அவளே, என் வழியைத் தேர்ந்து, கள்ளுக்கடை மறியல், கதர்ப்பிரசாரம்னு போட்டிபோட்டுக்கிட்டு ஜெயிலுக்குப் போனாள். இதெல்லாம் நினைச்சிப் பார் தாயம்மா?...”

“அய்யா, நீங்க எதானும் வழி காட்டுவீங்கன்னா, இப்படிச் சொல்றீங்களே?”

“இல்லே தாயம்மா. எனக்கு இப்ப ஒண்னு புரியிது. விடுதலைப் போராட்டத்தில் யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தி இழுத்துவிடல. ஆனால், காந்தி மகானின் வாழ்க்கை, சத்திய சோதனை. அந்த காந்தி, அவர் பேச்சு, நடப்பு எங்களையறியாமல், ஒரு தியாக வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தது. ஒட்டு மொத்தமாக இந்த தேசத்தின் குரல், சாதி, மத, பாஷை, எல்லாத்தையும் மீறி சுயராச்சியம்னு முழக்கியது இப்ப... அந்த இலக்கு வரு முன்னரே, குரல்களில் பிசிறடிக்கிறது எனக்குத் தெரியிது. பையனைத் திருடினியான்னு கேட்டா எகிறிப்பான். சிகரெட் ஊதுறியான்னு நான் கேட்டாலும் அவன் என்னைத்தான் வெறுப்பான். இந்தப் பள்ளிக் கூடத்திலேயே உணவு ஒழுக்கம், உடற்பயிற்சி, பிரார்த்தனை எல்லாம் எதற்கு?... ஒழுக்கம்ங்கறது வெளில இருந்து வலியுறுத்துவதாக இருந்தால் வராது. அகக்கட்டுப்பாடு வேணும்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/30&oldid=1049416" இலிருந்து மீள்விக்கப்பட்டது