பக்கம்:உத்தரகாண்டம்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    47


“நீங்க அதையெல்லாம் இப்ப எதுக்கு நினைப்பூட்டுறீங்க?... ராதாம்மா நோயி, நா வேண்டாத தெய்வமில்ல. ஒரு புழு பூச்சிக்குக் கூடத் தீம்பு நினைக்காதவங்க... அய்யா, நாட்டுக்குச் சுதந்தரம் கிடைக்கணும், அதுவரை பிரும்ம சரியம்னு இருந்தாங்க. அம்மா மனசு ரொம்ப இடிஞ்சி போனாங்க. அப்ப காந்தி வந்திருக்காங்களாம். அய்யா பாத்திட்டு வந்த பிறகு, அம்மா, தனியாப் பாக்கணும்னு போனாங்களாம். பாபுஜி, இவங்க இப்படி விரதம்னு சொல்றாங்க. எனக்கு ஒரே ஒரு புள்ள வேணும். பெண்ணாகப் பிறந்ததன் பலனை, தாயாக அநுபவிக்கணும்னு சொன்னாங்களாம். உடனே காந்திஜி கூப்பிட்டனுப்பி ஆசீர்வாதம் பண்ணினாராம். அதுக்குப் பிறகு இந்தப் பொண்ணு பிறந்ததும் தந்தியடிச்சுத் தெரிவிச்சு, அவுரே ராதாபாயின்னு பேருவக்கச் சொல்லி பதில் தந்தி குடுத்தாராம்...” என்று தொண்டைக்கரகரக்கச் சொன்ன போது, “அப்படியாம்மா? எவ்ளோ பெரிய விசயம்? அந்தக் காலத்துல, எங்க இயக்கத்துல யு.ஜில- இருப்பம். அப்ப எங்களுக்குப் பாதுகாப்புக் குடுக்கிற குடும்பத்தில் வயசுப் பெண்கள், இருப்பாங்க. அவங்கதா, பல சமயங்களிலும் தெரியாம சாப்பாடு கொண்டாந்து குடுப்பாங்க. போலீசின் துப்பாக்கியவிட, பசிக் கொடுமை பெரிசு. பின்னால அந்தப் பொண்ணுங்க பேருக்கோ, கட்சிக்கோ களங்கம் வரக் கூடாதுன்னு அந்தத் தோழர்கள், சாதி, மதம், ஏழை பணக்காரர், படித்தது படியாதது என்று வேத்துமையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு பகிரங்கமா கல்யாணம் பண்ணிட்டாங்க. கட்சி-கொள்கை வலுப்பட்டது... அந்தக் கட்சி பிளவு பட்டது, சோகம்...” என்று வருந்தியது நினைவில் மின்னுகிறது.

“ஆயா? புள்ள கிட்ட சொல்லிட்டு வந்திட்டியா?... ரோடு மேல போற?” என்ற கூச்சலில் திடுக்கிட்டு சாலை ஓரம் வருகிறாள்.. ரயில் கேட் வரவில்லை. சாலை முழுதும் பெரிய பேருந்துகள், இரு சக்கர மக்கள் ஊர்வலங்கள், உறுமும் லாரிகள், ஆட்டோ வாகனங்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/49&oldid=1049435" இலிருந்து மீள்விக்கப்பட்டது