பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

கொண்டதாகப் பல மாதங்களுக்கு முன் நான் கேள்விப் படநேர்ந்தது.” என்று கூறிவிட்டு உமாரை நோக்கினான்.

“அப்புறம்?”

“அலெப்போ நகரில் சில நாட்கள் இருந்துவிட்டு வடதிசை நோக்கிச் சென்றுவிட்டான். இது பல மாதங்களுக்கு முன்னால் நடந்தது.”

இதைக் கேட்ட உமார் ஆழ்ந்த பெருமூச்சொன்று விட்டான். அப்படியானால், யாஸ்மி அலெப்போ நகரில் இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அவளைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளவாவது முடியும்!

“நீ எனக்கு இரண்டு பரிசுகள்_கொண்டு வந்திருக்கிறாய், என்னிடமிருந்து உனக்கு என்ன கிடைக்கவேண்டும். சொல்” என்று ஆவலோடு உமார் கேட்டான்.

ஆனால் பின்னர் அவன் சொன்ன பதில் உமாரைத் திகைப்பூட்டியது.

“எனக்கு ஒன்றும் தேவையில்லை. ஆனால், ஹாஸானைப் பற்றிக் கொஞ்சம் நல்ல எண்ணத்தோடு எண்ணிப் பாருங்கள். அவன் தங்கள் நண்பனாக இருக்கக் கூடியவன். அவன் தங்கள் கருணைக்காகப் பிரார்த்திக்கும் காலம் ஒன்று வரக்கூடும். அப்பொழுது நீங்கள் அவனிடம் அன்பு காட்டவேண்டும்” என்று கூறினான். பிறகு, சலாம் செய்துவிட்டு வெளியேறினான்.

திடீரென்று ஏதோ நினைவு வந்தவன்போல, உமார் தனக்கு நிசாமிடமிருந்து வந்த கடிதங்கள் வைத்திருக்கும் பெட்டியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தான். அதை நன்றாக கவனத்துடன் படித்தான். கடவுள் நம்பிக்கையற்ற முலாஹித்துக்கள் என்ற ஒரு புதிய கூட்டத்தாரைப் பற்றி எச்சரித்து நிசாம் எழுதியிருந்தார். மாதி என்ற ஒரு புதிய தேவதூதர் பிறக்கப் போவதாகவும், அவர், இஸ்லாமிய மதக் கோட்பாடுகளையும் அரசுகளையும் அகற்றிவிடுவாரென்றும், அவர்களுடைய அந்தப் புதிய மதம் உலகத்தின் ஏழாவது மதமாகவும், கடைசி மதமாகவும் விளங்குமென்றும் அந்தக் கூட்டத்தில் பிரசாரம் செய்து வருவதைச் சுட்டிக் காட்டியிருந்தார். கொரசானிய பூமியிலே மறைந்து கிடக்கும் அந்தப் புதிய