பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169


“ஆம்! இருக்கப் போவதில்லை!” என்று சொல்லி அவள் சிரித்தாள்! அது என்ன சிரிப்பு?

“இதோ, சுல்தான் கூடாரத்தில் மணியடித்து விட்டார்கள். இப்பொழுது, நான் குளித்துக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சுல்தானைப் போய் பார்க்க வேண்டும். அவரிடம் நாம் ஊர் திரும்புவதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு வரவேண்டும்; யாஸ்மி!”

“போய் அனுமதி பெற்றுக்கொண்டு விரைவில் வாருங்கள்! ஒரு சிறிது நேரமே தங்களைப் பிரிவதென்றாலும் எனக்குப் பொறுக்க முடியாது. ஆகவே, விரைவில் திரும்பி வாருங்கள்!” என்று யாஸ்மி விடை கொடுத்தாள்.

ஆனால் அவள் கொடுத்த விடை ஜன்மாந்திர விடை போலத் தோன்றியது.


24. பேகம் பொற்சித்திரமும் பினமாகிப் போனதுவே

சுல்தான் மாலிக்ஷா அவர்கள், அவன் செல்வதற்கு அனுமதியளித்து விட்டார். அவனுடைய காதல் நெஞ்சில் களிப்பு நிறைந்திருந்தது. பயணத்திற்குப் பாதுகாப்பு வீரர்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டான். அடிமைகள் அவனுடைய சாமான்களை மூட்டைக் கட்டினார்கள். இரண்டு குதிரைகளுக்கிடையே கட்டிப் பொருத்தப்படக்கூடிய முறையிலே மூடப்பட்ட ஒரு பிரம்புத் தொட்டில் ஒன்றை வாங்கினான். அதிலே யாஸ்மியைப் படுக்க வைத்துக் கொள்ளலாம். ஜபாரக்கிற்காக ஒரு புதிய கழுதை வாங்கினான்.

“ஜபராக், திரும்பவும் பிச்சை யெடுக்கவே வேண்டியதில்லை” என்று சொல்லி சிரித்தான்.

அந்தக் கூன விகடன் அவனைக் கலவரத்தோடு பார்த்தான். “தலைவரே! ஒரு விஷயம் தங்களுக்கு எச்சரிக்க விரும்புகிறேன். தாங்கள் மிகவும் பலமுள்ளவர். ஆனால், யாஸ்மி மிகப் பலவீனமாக இருக்கிறாள். மகிழ்ச்சியைத் தாங்க முடியாத அளவு பலவீனமாக இருக்கிறாள்” என்றான்.

“நீ ஒரு புத்தியுள்ள முட்டாள்!”