பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174



ஒட்டகக் காரர்கள், “நாங்கள் பிணத்தைத் தூக்கிச் செல்ல மாட்டோம், மிதப்புத் தோணியிலும் ஏற்றமாட்டார்கள்” என்று கத்தினார்கள்.

“புதை குழிக்குத்தான் தூக்கிச் செல்லவேண்டும். பயணத்திற்கல்ல, புதைகுழிதான் ஏற்கெனவே தோண்டப் பெற்றிருக்கிறதே! சீக்கிரம்!” என்றான் ஜபாரக்.

பயந்துகொண்டிருந்த அவர்களை விரட்டியடித்து, பிணத் தொட்டிலைத் தூக்கும்படி செய்தான். அவர்கள் பயத்துடனும் அவசரமாகவும், மேட்டின்மேல் அந்தக் கனமான தொட்டிலைத் தூக்கிச் சென்றார்கள். மெதுவாகக் கீழே இறங்கிப் புதைகுழிக்குள்ளே வைத்துவிட்டு, மண்ணை வாரிக் கொட்டி மூடினார்கள். அதன் மேல் ஏற்கெனவே சேர்த்து வைத்திருந்த கற்களைக் குவித்து வைத்து விட்டு வேகவேகமாகக் கூடாரத்தை நோக்கி ஓடிவந்தார்கள். ஒட்டகக் காரர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளையும் சாமான்களையும் ஒட்டகங்களிலே ஏற்றிக்கொண்டிருந்தார்கள். சிப்பாய்கள் குதிரைகளிலே சேணம் பூட்டித் தயாராக நின்றார்கள்.

“தலைவரே! எல்லா வேலையும் முடிந்து ஆயத்தமாக நிற்கிறோம். புறப்படவேண்டியதுதான்” என்று உமாரை நோக்கி ஜபாரக் கூறினான்.

வாயில் வழியாக வெளியில் வந்த உமாரின் தலைப்பாகையின் வால் நுனி அவனுடைய வாயிதழ்களில் ஊடே பறந்து வந்து சிக்கிக் கொண்டது. வெளியில் சுழன்று கொண்டிருக்கும் தூசிக் காற்றையும் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கலங்கிய நீரையும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றான். புறப்படுவதற்குத் தயாராக நின்ற அந்த மனிதர்களைப் பார்த்து,

“இந்தக் கூடாரத்தைக் கொளுத்தி விடுங்கள். உங்களிடம் உள்ள பொருள்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எங்காவது ஓடித் தொலையுங்கள் மீண்டும் என் கன்முன்னே உங்கள் முகத்தைக் காட்டாதீர்கள். மீண்டும் நீங்கள் என்முன்னே வருவீர்களானால், உங்கள் முகங்கள் என் நினைவுகளைக் கிளறிவிடும். அதை என்னால் பொறுக்க முடியாது. போய்விடுங்கள்!” என்றான்.