பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179

கூர்டியர்கள் திடீரென்று இறங்கி வந்து ஒட்டகச் சாரிகளைக் கொள்ளையடிப்பது அந்தப் பாதையிலே வழக்கமான ஒரு நிகழ்ச்சி.

இரவு எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் கழிந்தது. எல்லா வியாபாரிகளும் அல்லாவுக்கு நன்றி கூறி மறுபடியும் ஒருமுறை பயணக் கற்களைச் சிறிது தூரம் தள்ளிவிட்டார்கள்.

பிறகு அவர்கள் பயணத்தைத் தொடங்கு முன்னரே, தங்கள் கூட்டத்திலே வந்த மது வியாபாரி ஒருவனை அழைத்து, தங்களுடைய ஒட்டகச்சாரி கண்ணுக்கு மறையுந் தூரம் வரை கடந்து போன பிறகு தொடர்ந்து வரச்சொன்னார்கள். தங்களுடன் கூட வரக் கூடாதென்று கூறிவிட்டார்கள். திருக்குரானிலே பாவம் என்று வகுக்கப்பட்ட பொருள்களிலே மது ஒன்று. அந்த மதுவைக் கொண்டுவரும் அவன் தங்கள் கூட்டத்திலே இருந்தால், அல்லாவின் கோபத்திற்கு ஆளாகும்படி நேரிடும். கொள்ளைக்காரனிடம் மாட்டிக்கொள்ளும்படி நேரிட்டாலும் நேரிடலாம். ஆகையால், தாங்கள் நெடுந்துரம் போனபிறகே, அவன் தன்னுடைய ஒட்டகங்களுடன் வரலாமென்று சொல்லிவிட்டார்கள். மத பக்தியுடைய அவர்கள் அக்ரோனோஸையும் தங்கள் கூட வருவதற்கு அனுமதிக்கவில்லை. “நீ ஒரு கிரேக்கன். மத விரோதி.நீயும் மது வியாபாரியுடன் சேர்ந்து வா” என்று கூறினார்கள். அதற்கு அக்ரோனோஸ், “நான் கிரேக்கனல்ல; ஆர்மீனியன்” என்றான். “அதுவும் ஒன்றுதான். பன்றிக் கறியைத் தின்னும் நீ மத விரோதிதான். நீ எங்களுடன் இருந்தால், உனக்காக வரும் தீமை எங்களையும் பாதிக்கும். எங்களோடு வராதே!” என்று கூறிவிட்டார்கள். அவன் பதில் பேசாமல் நின்றுவிட்டான்.

அக்ரோனோசையும், மது வியாபாரியையும் விட்டுவிட்டு, மற்றவர்கள் அனைவரும் தங்கள் குதிரைகளிலும், ஒட்டகங்களிலும் சாமான்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள். உமார் அவர்களுடன் புறப்படாமல் தன்னுடைய மட்டக்குதிரையைப் பிடித்துக்கொண்டு, பயணக் கற்களில் ஒன்றின்மேல் உட்கார்ந்திருந்தான். அதைக் கவனித்த வியாபாரிகள் அவனை வரும்படி அழைத்தார்கள். “நான் வரவில்லை. மதுவில்லாமல் நீங்கள் போகிறீர்கள்! நான் மதுவில்லாமல் இருக்கமுடியாது! போங்கள்” என்று விடை கொடுத்துவிட்டான். ஜபாரக்கும் அவனுடன் தங்கிவிட்டான்.