பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202


“ரோட்ஸ் தீவுதான் நாம் தேடிய இடம். ரோட்ஸ் தீவில் இருந்த ஹிப்பார்க்கஸ் என்ற வான நூற்கலைஞன் ஆயிரம் நட்சத்திரங்களின் இடங்களைப் பற்றிக் குறிப்பு எடுத்திருக்கிறான். அவன் தயாரித்த அட்டவணையாகத்தான் இருக்க வேண்டும் இது.”

மைமன் என்ற அந்தக் கிழட்டு வான சாஸ்திரியின் உதடுகள் ஒலியில்லாமல் அசைந்தன. பெரும் பசியாளன் அல்லது பேராசை பிடித்த கருமியைப் போல் அவனுடைய நாடி நரம்புகளிலெல்லாம் ஒரு பேராசை யோட்டமெடுத்தது. ஒன்பது நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த ஒரு விஞ்ஞான இரகசியத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய ஒரு பெருஞ் செயலும் இதன் பலனாகக் கிடைக்கக் கூடிய பெரும் புகழும் அவர்கள் எதிரிலே காத்துக் கொண்டிருக்கிறது.

“ஆம்! ஆம்! டோலமியே, அவருடைய வானநூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலே, ஹிப்பார்க்கஸ் கண்டு பிடித்த ஆயிரத்து எண்பது நட்சத்திரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது மட்டும் உண்மையாக இருந்தால்...” தன் மதிப்பு உயரும், புகழும் உயரும் என்ற இன்பக் கனவு மைமன் உள்ளத்திலே எழுந்து அவனை மெய்மறக்கச் செய்தது.

“அது உண்மையாகத்தான் இருக்கும். இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இயேசுநாதர் பிறப்பதற்கு நூற்றி முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், ரோட்ஸ் தீவின் கோணத்திற்குச் சரியாக இருக்கிறதா என்று இந்த அட்டவணையைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்”.

“நாம் இரண்டுபேரும் தனித்தனியாகக் கணக்குச்செய்து பார்ப்போம், அப்பொழுதுதான், தவறு ஏற்படாமல் செய்யமுடியும்!” என்று கூறினான் மைமன். மறுபடியும் தவறு வந்து வேலை பயனற்றுப் போய்விடக் கூடாது என்று பயப்பட்டான். கண்டுபிடிப்பு பெருமையிலும், புகழிலும் தனக்கும் பங்கிருக்க வேண்டும் என்ற பேராசையும் அவனுக்கு இருந்தது. புகழ் என்றால் உயிரையும் கொடுக்கும் பேரார்வம் அவன் குருதியிலே ஓடிக் கொண்டிருந்தது.

மூன்று நாட்கள் அவர்கள் வேலை செய்தார்கள். அரை குறையாகத் தூங்கினார்கள். இரவில் வெகுநேரம் கழித்தே