பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271

பேராசிரியன். அதோ அங்கே இருக்கிறாரே, அவர் உலகச்சுற்றுப் பிரயாணம் செய்து வருபவர். அவருடைய கதைகளிலே மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவர். அந்த அடுத்த ஆள் சாமியார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. நான்காவதாக இருப்பவர் பருமனாக இருக்கிறாரே அவர்தான் எள்ளு வியாபாரி - அழிக்கப்பட்ட ஆனால் இனிமையான சரக்குகளையும் அவர் வியாபாரம் செய்கிறார். அப்புறத்தில் இருக்கும் இரட்டையர்கள் இஸ்கானிலிருந்து ஓய்வுக்காக வந்திருக்கும் கனவான்கள். சூதாட்டத்தில் மட்டும் அவர்களை நம்பக்கூடாது. அன்பர்களே! இப்பொழுது, உமார் அவர்களைச் சேர்த்து நாம் ஏழு பேராகி விட்டோம். நட்சத்திரப் பேராசிரியர் அவர்கள் நம்முடன் சேர்ந்து, பெருமைப் படுத்துவார்களானால் நாம் இப்பொழுதே புறப்படலாம்.”

“தங்களுடைய பண்பினால் நான் பெருமைப் படுத்தப் படுகிறேன்” என்று உமார் புன்சிரிப்புடன் கூறினான்.

கொரசான் நாட்டிலே, ஒரு புதிய மதத்தைப் போதிக்கக் கிளம்பியிருக்கும் ஏழாவது கொள்கைக்காரர்களைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் அவன் கேள்விப்பட்ட கதைகள் ஒன்றுக்கொன்று முரணாயிருந்தன. ஏழாவது நபி ஒருவர் வருவார் என்று எதிர்பார்க்கும் நம்பிக்கை யுடையவர்கள் என்று அவர்களைப் பற்றிச் சிலர் கூறினார்கள். புதிய மதத்தைப் போதித்து, இஸ்லாமிய மதத்தை மறுப்பவர்கள் என்று சிலர் கருதினார்கள். மற்றும் சிலரோ, அவர்கள், தேவதைகளின் அருளாலோ, அல்லது துர் ஆவிகள், குட்டிச்சாத்தான் இவற்றின் உதவியாலோ மாயவித்தைகள் செய்பவர்கள் என்று கூறினார்கள். அருகிலே உள்ள நாற்சந்தியிலே தங்களைச் சேர்ந்தவர்கள் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும்பொழுது, இங்கே உட்கார்ந்து வேடிக்கை பேசிக் கொண்டிருக்கக்கூடிய இவர்களின் மனிதத் தன்மையைப் பற்றி உமார் வேறு விதமாக நினைத்தான். இருப்பினும், இந்தச் சமயத்தில் அவர்களுடைய போர்வையைக் கிழித்தெறிய முயற்சிப்பது முட்டாள் தனமாகிவிடும் என்று பேசாமல், இருந்தான்.

“ஹாசான் இபின் சாபா உங்களுடன் இருக்கிறானா? நான் அவனைப் பார்க்க வேண்டும்” என்று உமார் கேட்டான். அந்த