பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284


“வேறு யார்? அவரேதான்! அடிப்படை விஞ்ஞானங்களான தருக்கனூல், கணிதம், இசை, இடைவெளிக் கணிதம், வானியல், பொருளியல், மனோவியல் ஆகிய ஏழிலும் எனக்கு ஓரளவு பயிற்சியும் திறமையும் உண்டு. ஆனால், எங்கள் தலைவர் இவற்றோடு, எல்லாவிதமான மதங்களிலும், யூதர்களின் வழிவழி வாய்மொழிக் கொள்கையிலும், கண்கட்டு வித்தையிலும் கூட நல்ல தேர்ச்சி பெற்றவர். அவர் நிறையறிவுடையவராக இருப்பதால், நாங்கள் மகிழ்ச்சியுடன் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோம்.”

பிளேட்டினஸ் நூலின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த உமாரின் காதில் கடைசியில் அவன் சொன்ன விஷயம் படவில்லை. ஒரு முக்கோணப் பெருக்கலின் அடிப்படைபற்றிய பிரச்சினையில் அவன் மனம் ஈடுபட்டிருந்தது.

கழுகுக் கூட்டிலே, காலம் அலகிடப்படாமலே கழிந்துகொண்டிருந்தது. அந்த நிலையத்தில் உள்ள அரும்பெருஞ் செல்வங்களானவைகளில் ஆழ்ந்து ஈடுபட்டிருப்பதும், மற்ற நேரங்களில், வெளியுலகில் பல இடங்களிலும் சுற்றித் திரிந்துவிட்டு நிறைந்த அனுபவத்துடன் திரும்பி வந்துள்ள பிரசாரகர்களுடன் பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாகக் கொண்டான் உமார். அவர்கள், சீனதேசத்து விஞ்ஞானத்தின் பெருமையைப்பற்றியும் பைசான்டின நகரத்து இசைக்கலையின் அருமையைப் பற்றியும் விவாதித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ரக்கின் உட்டின், அதிசயக் கணக்குகளிலே தன் அறிவைச் செலுத்திவந்தான். எப்படி யெப்படியோ எண்களைப்போட்டுக் கூட்டுவதால் வரும் ஒரே விடையைப்பற்றியும் இன்னும் பல மாதிரியாகவும் வியப்பதற்குரிய வகையில் விடைவரும் கணக்குகளைப் பற்றியும் பேசினான், அவன். சில சமயம் செய்தும் காண்பித்தான். இதையெல்லாம் கண்ட உமார், “உன் கணக்குகள் அதிசயமானவைதாம்! ஆனால் அழுத்தமில்லாதவை” என்று கூறிவிட்டான்.

“சாதாரண மக்களுக்கு, அவை அழுத்தமில்லாதவையாகத் தோன்றுவதில்லை; தெய்வீகமாகத் தோன்றும்!” என்று கூறினான் ரக்கின்.