பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350


காசாலி, அவமான உணர்ச்சியுடன், ‘நீ ஏன், என்னைக் கூட்டிவந்து இப்படிப் பிள்ளை விளையாட்டுக் காண்பித்தாய்?’ என்று கேட்டான்.

‘ஏனென்றால், இந்த நாட்டிலேயே நீங்கள்தான் பெரிய அறிவாளி. தாங்கள் கண்ணால் கண்டதை உலகத்துக்கு எடுத்துச் சொன்னால், தங்கள் பேச்சை உலகம் காது கொடுத்துக் கேட்கும். முதலில் நீங்கள் நடந்து சுற்றிப் பார்த்தீர்கள். இரண்டாவது தடவை கோபுரம் சுழல்வதுபோல் காட்சியளித்தது, எதனால்?’

‘நான் நகரவில்லை. ஆனால், தந்திரமாக எனக்குத் தெரியாமலே நான் சுழற்றப்பட்டேன். இந்தத் தந்திரம்தான் நீ மதத்துரோகிகளிடம் படித்து வந்த பாடமா?’ என்று கோபத்துடன் காசாலி கேட்டான்.

‘ஒவ்வொருநாள் இரவும், நட்சத்திரக் கூட்டங்கள் உங்களைச்சுற்றி வருவதாகத் தோன்றியது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நான் அசையவேயில்லை. ஆகையால், நட்சத்திரங்கள் என்னைச்சுற்றி வருகின்றன என்று சொல்கிறீர்கள். ஆனால், உண்மை அதுவல்ல, நட்சத்திரங்கள் அசையவில்லை. அவை இருந்த இடத்திலேயே இருக்கின்றன. நாம் இருக்கும் பூமிதான் வானவீதியில் சுழன்று வருகிறது. ஆனால், அது நமக்குத் தெரியாமல் சுழலுவதால் நாம் நட்சத்திரங்கள் சுற்றுகின்றன என்று எண்ணுகிறோம். உண்மையில் பூமிதான் சுழன்று வருகிறது என்று உமார் விளக்கினான்.

‘இல்லை, வானவெளியில் நடுமத்தியிலே, என்றும் அசையாமல் இருக்கும்படிதான் அல்லா இந்தப் பூமியை ஏற்படுத்தி யிருக்கிறார்!’ என்று காசாலி உறுதியாகக் கூறினான்.

‘இஸ்லாத்தின் சான்று - எங்கள் பேராசிரியர். அவரை உம்முன் மண்டியிடச் செய்வதற்காக நீர் தந்திரம் செய்திருக்கிறீர். வானசாஸ்திரியாரே! வேண்டாம் இந்த விபரீத புத்தி!’ என்று காசாலியின் மாணவன் ஒருவன் கத்தினான்.

‘அல்லாவின் அருளின்படிதான் எல்லாம் நடக்கும். அல்லா, பூமியைச்சுற்றி வரும்படிதான் நட்சத்திரங்களை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று மற்றொருவன் கூவினான்.