பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

353


‘சுல்தான் மாலிக்ஷா இறந்துவிட்டார்’ என்ற செய்தி சாம்ராஜ்யமெங்கும் காட்டுத் தீ போலப் பரவியது. வேட்டைக்குச் சென்ற மன்னர், நோய்வாய்ப்பட்டார். மருத்துவர்கள் முயற்சியெல்லாம் பலிக்காமல் உயிர் நீத்துவிட்டார். பால்க்கிலிருந்து பாக்தாது வரையிலே எல்லா நகரங்களிலும் பரபரப்பாயிருந்தது.

கடைகள் அடைக்கப் பெற்றன. அதிகாரமும் சக்தியும் உள்ள அமீர்கள் ராணுவ வீரர்களைத் தங்கள் கைவசப் படுத்திக் கொண்டார்கள். தத்தம் முகாம்களிலே தங்களால் முடிந்தவரை சேனைகளைத் திரட்டிக் கொண்டார்கள்.

கழுகுக் கூட்டை முற்றுகையிட்டிருந்த படைகள் மாலிக்ஷாவின் ஒரு மகனான பார்க்கியருக் என்பவனுடைய சேனையில் வந்து சேர்ந்து கொண்டன. நிசாம் அல் முல்க்கின் மக்கள் பார்க்கியருக்கை ஆதரித்தார்கள். அவனையே அரசனாக்க முயற்சித்தார்கள்.

அதே சமயத்தில், மாலிக்ஷாவின் மற்றொரு மகனான முகமதுவை பாக்தாது தேசத்து காலிப், சுல்தானாகப் பிரகடனம் செய்தார். இதனால், இரண்டு இளவரசர்களுக்கும் ஊடே, கலகம் ஏற்பட்டு உள் நாட்டுக் குழப்பம் உண்டாகியது. அதே சமயம், கழுகுக்கூட்டு முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஹாஸான், உள்நாட்டுக் குழப்பம் நடக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழி துறைகளை ஆராய்வதற்கு யாருக்கும் தெரியாமல் வெளியேறி கெய்ரோவில் உள்ள தன் எகிப்தியத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப் போய்விட்டான்.

ஆயீஷா, காசர் குச்சிக் மாளிகையைவிட்டு வெளியேறி, இஷாக்கையும், ஆயுதம் தாங்கிய பல வீரர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, உமார் இருக்கும் நிசாப்பூர் அரண்மனைக்கே வந்துவிட்டாள்.

நிசாப்பூர் அரண்மனை சிறியதாக இருந்தாலும், உமாருடன் கூடஇருக்க வேண்டுமென்று அவள் வந்து விட்டாள். உள்நாட்டுக் கலகம் தொடங்கிய பிறகு, அரசாங்கத்துப் பொருளாளன் உமாருக்குக் கொடுத்து வந்த சம்பளத்தை நிறுத்திவிட்டான்.