பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354


அந்தச் சமயத்தில் இளவரசன் பார்க்கியருக், பாக்தாதுச் சேனையை ஒரு போரிலே தோற்கடித்து விட்டான். கவிஞன் மூ இஸ்ஸி பார்க்கியருக்கின் வெற்றியைப் புகழ்ந்து பரணிபாடி, இளவரசனிடம் நிறையப் பொருள் பெற்றான். அதே சமயம் தன் வருத்தத்தைத் தெரிவித்து இரங்கற்பா ஒன்று மகமதுவுக்கு அனுப்பினான்.

ஒருவேளை, நாளையப் போரிலே, அவன் வெற்றி யடைந்துவிட்டால், அவனுடைய ஆதரவு வேண்டுமே என்று!

அயீஷா, இதைச் சுட்டிக்காட்டி, உமாரை பார்க்கியருக் முகாமிற்குச் செல்லும்படி தூண்டினாள். அங்கே சென்று சோதிடம் கூறினால், வரும்படி கிடைக்கலாமே என்று அவள் யோசனை கூறினாள். இந்த மாதிரிச் சமயத்தில்தான் சோதிடர்களுக்குக் கிராக்கியுண்டே என்று அவள் எண்ணினாள்.

ஆனால், உமார் மறுத்து விட்டான்.

மாலிக்ஷா இறந்தது முதல் அவன் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தான். ரஹீம்-யாஸ்மி-ஜபாரக் இவர்களெல்லாம் போனது போல் மாலிக்ஷாவும் போய்விட்டார்.

இப்படி துக்கம் கொண்டிருந்த அவனுக்குப் பொருள் தேடும் எண்ணம் தோன்றவில்லை.

ஒருநாள், இஸ்லாத்தின் நீதிபதிகளான காஜிகள் உமாரைத் தங்கள் சபைக்கு வரும்படி அழைத்திருந்தார்கள். அவன் புறப்படும்போது, அவனுடைய துணையாராய்ச்சியாளர்கள் ‘சாதிகளுக்குக் கோபம் வரும்படி பேசாதீர்கள்’ என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்.

நீதிபதி சபையின், சுவர்ப்புறத்து ஆசனங்களிலே வரிசை வரிசையாகக் கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.

உமாருக்கு நேர் எதிரே, வெள்ளைத் தலைப்பாகைகளுடன் நீதிபதிகளான சாதிகள் அமர்ந்திருந்தார்கள். நீதிபதிகளுடன் வேதாந்தி காசாலியும் உலேமா சபையின் தலைவரும் அமர்ந்திருந்தார்கள். அவை முழுவதும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.