பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

    நறியமதுவும் அழகுடைய
    நங்கை நல்லாள் ஒருத்தியும் என்
    அருகில் வைத்துப் புதைத்திடுவீர்
    அதுவே விருப்பம் ஐயன்மீர்!

இது நான் முன்பே பாடிய பாட்டல்ல. ஆனால், இந்தச் சமயத்தில் என்னுள்ளத்தில் எழுந்த கவிதையிது. இதுவே நான் உங்களை வேண்டுவதும்!’

கோபம்தான் அவனுக்குப் பதிலாகக் கிடைத்தது. உலேமாத் தலைவர் அவருடைய கையை உயர்த்தி, நீ வெளியே சென்றிரு. தீர்ப்பைப் பிறகு தெரிவிக்கிறோம் என்றார். காவலர்கள் உமாரை மசூதிக்கு அழைத்துச் சென்றார்கள், போகும் வழியிலே, ஒரு சாமியார், ‘கழுகுக்கூட்டிலே பாதுகாப்பு இருக்கிறது’ என்று மெதுவாகக் கூறினான்.

உமார் அதைக் காதிலே போட்டுக் கொள்ளவில்லை. மசூதியின் உள்ளேயுள்ள ஒரு கல்லின்மேல் போய் உட்கார்ந்தான். கைதியான அவனைச் சுற்றிக் காவலர்கள் நின்றார்கள். ஒரு நாள் அவனைப் பாதுகாப்பதற்காக நின்ற காவலர்கள், இன்று அவன் பறந்தோடிவிடாமல் பார்த்துக் கொள்ளச் சுற்றி நின்றார்கள்.

தீர்ப்பின் முடிவைத் தெரிவிப்பதற்கு உலேமாத்தலைவரே வந்தார்.

‘மத நம்பிக்கையில்லாத ஒருவனால் இயற்றப்பெற்றவையாகக் கருதப்பெற்று உன்னுடைய புத்தகங்களெல்லாம் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப் பெற்றன. பள்ளிக்கூடங்களிலே அவை தவிர்க்கப்படும். மீதியுள்ளவை எரிக்கப்படும்.

‘விண்மீன் வீடு பறிமுதல் செய்யப்பெற்று நிசாப்பூர் சட்டமன்றத்துக்கு உரிமையாக்கப்பட்டது. அக்கட்டிடச் சுவரைத்தாண்டி அடியெடுத்து வைக்கவோ, நிசாப்பூர் அரசாங்க எல்லைக்குள்ளே உள்ள மக்களிடம் பேசுவதற்கோ உனக்கு உரிமைகிடையாது தடுக்கப் பெற்றிருக்கிறது.