4
கணவன், பந்துக்கள் யாவரும் வண்டியேறுவதைப் பார்த்தாள்.
கணவன் தன்புறம் நிமிர்ந்து பார்க்க மாட்டானா, தன்னை அழைக்க மாட்டானா, என்று துடித்தாள், தவித்தாள்!
அவன் ஏன் நிமிர்ந்து பார்க்கிறான்?
உலகில், பணம், பதவி, சுக சௌக்கியங்களைச் சிறிதும் கருதாமல் சுய மதிப்புள்ளவன், மானம் மிக்கவர்களில் முதல்வன் உண்டு என்றால் அது சுவாமிநாதன் தான்!
கர்வமும், பணத்திமிரும், தலை வணங்காமையும், நெஞ்சு உரமும் ஒருங்கே குடிகொண்ட தனவந்தன் என்பதற்கு உபமானம் பிரணதார்த்திதான்! எனவே சுவாமிநாதனும் வரவில்லை ! பிரணதார்த்தியும் பெண்ணைப் புக்ககம் அனுப்பவில்லை?'தன்னாலே வருவான் பார்!' என்று திமிராகப்பேசி மகளுடைய வியாகூலத்தை அகற்றப் பார்ப்பார்.
தர்மு, கல்லும் உருக, கடிதம் எழுதி வேண்டினாள் கணவனை. தகப்பனாருக்குத் தெரியாமல் தன்னை அழைத்துச் செல்லும்படி கூட வேண்டுகோள் விடுத்தாள்.
சுவாமிநாதனா அசைபவன்?
"என் கணவனிடம் என்னைக் கொண்டு விடுகிறாயா உயிரை விட்டு விடட்டுமா?” என்று கேட்கத் தெரியாதபடி இருந்தால் எவ்வளவு நாள் இருக்கிறாளோ இருக்கட்டும்!
இவ்விதம் கறுவினான் சுவாமிநாதன்.
2
இடையில் ஏழாண்டுகள் உருண்டோடின !
கோடாலி முடிச்சும் போர்த்தின முதுகுமாக, கோயிலுக்குச் சென்ற தர்முவைப் பார்த்து உள்ளம் நெக்குருக தன்னை மறந்து நின்றிருந்தாள் வாலாம்பாள்.
"அம்மா !"