உரைநடைக் கோவை
களிலுள்ள இலக்கியம், இலக்கணம், தருக்கம், சமயம் முதலிய நூற்பரவைகளைத் தேக்குற உண்டு நூலியற்றல், உரை வரைதல், பிறர் புரைபட யாத்த நூலுரைகளின் குற்றங்கண்டு விலக்கல் முதலிய எல்லாக் கல்வித்துறைகளிலும் ஒப்புயர்வின்றி விளங்கிய தமிழ்ப் பெரும் புலவர் தலைமணி யென்பதும், சைவ சமய முதனூற் பேருரையாசிரியரென்பதும் இத்தமிழுலகம் அறிந்தனவே. அவர்கள் வரம்பிட்டுரைத்த தொல்காப்பியச் சூத்திர விருத்தி முதலியனவும், சிவஞான போதச் சிற்றுரை, பேருரை முதலியனவும் தமிழ்ப் புலவர்களாலும் சைவ சமயப் பெரு மக்களாலும் தலைமேற்கொண்டு போற்றற் பாலனவாம்.
இங்குக் கூறிய நூலுரைகளின் பெயர்களும் சுருக்கம் பற்றி இவ்வாறு கூறப்பட்டன. ஈண்டுக் கூறப்படாத பிற நூலுரைகளைப் பற்றியும், ஆசிரியர்களைப் பற்றியும் உள்ள என் மதிப்பு ஒரு சிறிதுங் குறைந்ததன்று. வாய்ப்புழி விரித்துரைக்கும் அவாவுடையவனே.
அகப்பொருள் இயல்புகளை அறத்தினின்றும் பிறழாதெடுத்து நயம்பட உரைக்கும் அழகு தமிழ் மொழிக்கே சிறந்ததாகும். தலைவன் தலைவி, பாங்கன் பாங்கி, செவிலி நற்றாய் முதலியோர் இன்ன இன்ன இடங்களில் இவ் விவ் வண்ணம் உரையாடக் கடவரென்று வரையறுத்த முறை பெரிதும் இன்புறற்பாலது. அகப்பொருள் விரிவைத் தமிழிற் பரக்கக் கண்ட ஒரு சிலர், இம் மொழி காம நிலையே பற்றியதென்று கூறினர். அவர் கூற்று, “தோள்கண்டார் தோளே கண்டார்” என்றாங்கு அப்பகுதியில் ஈடுபட்டு