பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

119

ஞாயிறு தோறும் தொழுகை நடக்கும். மாதாகோவிலுக்குச் சென்று வழிபாட்டிலே கலந்துகொள்வான். அவர்களோடு சேர்ந்து இசை பாடுவான். விடுமறை நாட்களில் தன் அண்ணன் ஆமியோடு தங்கி அவனுக்கு உதவியாயிருப்பான்.

இவன் கண்டதென்ன?

ஹவாய் தீவுகளில் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்தாலும் நிறவேற்றுமை அதிகமாகக் காணப்பட்டது. ஒரு நாள் இவனை தற்செயலாகச் சந்தித்த ஒரு அமெரிக்கன் “ஏ சீனாக்காரனே” என்று வெறிக்கப் பார்த்தான். ஆமிக்கு வாணிபத்தில் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை தம்பி சன்னுக்கு எழுதி வைத்தான். இலக்கணத்தில் நல்ல தேர்ச்சியடைந்ததற்காக இவனுக்கு ஒரு பரிசு கிடைத்தது. மூன்றாண்டுகள் படிப்பு. வயது பதினாறு. தன்னோடு படித்த சீனச் சிறுவர்கள் சிலர் கிருஸ்துவர்களாகிவிட்டார்கள். ஆகவே இவனும் கிருஸ்துவனாக வேண்டுமென்ற எண்ணத்தோடு ஆமியை ஒப்புதல் கேட்டான். ஆமி திடுக்கிட்டுப் போனான். கடுங்கோபங் கொண்டு தம்பியைக் கண்டித்துவிட்டு ஊருக்குத் தன் பெற்றோர்களுக்குத் தெரிவித்து விட்டான். “அவனை எவ்வளவு விரைவில் திருப்பியனுப்பிவிட முடியுமோ அவ்வளவு விரைவில்? அனுப்பிவிடு. ஏனெனில் அவனுக்கு பதினாறு வயது ஆகிவிட்டபடியால் திருமணம் செய்யவேண்டும் (சீனாவில் இந்த சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்ற வழக்கம் இருந்தது.) ஆகையாலே அனுப்பிவிடு” என்று பெற்றோரிடம் இருந்து கடிதம் வந்தது. பெற்றாேர்களும் பெண்ணைப் பாத்து வைத்துக்கொண்டு இவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். வந்து சேர்ந்தான். என்றாலும் மனம் அவ்வளவு மகிழ்ச்சியாயில்லை. ஏனெனில் இவன் ஏதோ ஒரு இருட்டறைக்கு வந்தது போலவே எண்ணினான். இவன் வந்த பிறகு ஊர் மக்கள் பெரிய மாறுதலைக் கண்டார்கள். இவன் பேச்சிலும் நடை, நொடி, பாவனையிலும் முற்றிலும் மாறுபட்ட பையனாகவே காணப்பட்டான்.