முன்னுரை
மனிதனை மனிதனாக்குவது மொழி. நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலத்திலிருந்தே அவனோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்து வளர்ந்து வருவது மொழி. இத்தகைய மொழி மனிதனின் வாழ்க்கையில் இல்லையெனின் மனிதன் மனிதனாக வாழ முடியாது. ஆறறிவு பெற்ற மனித சமுதாயத்திற்கும் ஐயறிவு கொண்ட விலங்குகளுக்குமிடையே அதிக வேற்றுமை இராது. நம் முன்னோர்கள் கண்ட உண்மைகளை நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் வசதியும் இரா. அடுத்தடுத்து வாழ்ந்துவரும் மனித சமுதாயத்தில் தோன்றும் அறிவுக் கருத்துக்களும் ஆராய்ச்சி உண்மைகளும் காலம் கடந்தும் நாடு கடந்தும் செல்லமுடியாத ஒரு தேக்க நிலையிலேயே நிற்கும். மனிதனின் கடந்தகால வளர்ச்சியில், கண்டுபிடிப்புகளில் வருங்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அவன் முயற்சியில் எந்த விதமான முன்னேற்றமும் இராது. இந்நிலையில்தான் மனித நாகரிகத்தில் மொழியின் முக்கியத்துவம் விளங்கும்.
இத்தகைய மொழிகளில் வாழ்ந்தவை எத்தனையோ? வளர்ந்தவை எத்தனையோ? தேய்ந்தவை எத்தனையோ? தேங்கி நிற்பவை எத்தனையோ? சிந்தனைக்கும் செவிக்கும் விருந்தாம் செம்மொழிகள் எத்தனையோ?
அறிஞன் சாக்கிரட்டீஸ் பேசியது கிரேக்கம். அனைத்துலகையும் ஆளக் கங்கணம் கட்டிய வீரனாம் சீசர் பேசியது லத்தீன். புரட்சிக் கனல் கொண்ட ரூசோ பேசியதும் எழுதியதும் பிரஞ்சு. நாடகக் கவிஞன் ஷேக்ஸ்பியரின் மொழி ஆங்கிலம். கவிஞன் காளிதாசனைப் பெற்றது
சமஸ்கிருதம். கம்பனையும் வள்ளுவனையும் தந்தது கன்னித்
ix