பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

உலக வரலாற்றில்



பூட்டுத் தொழிலில் டிட்டோ ஈடுபட்ட போதுதான், உலகத்தின் உண்மைத் தோற்றம், வாழ்க்கையில் வயிறு வளர்க்கும் நெளிவு சுளிவுகள் எல்லாம் அவருக்குப் புரிந்தது. அப்போது யூகோஸ்லேவியாவில் பரபரப்பான அரசியல் நிலை சூடு பிடித்து நடந்து கொண்டிருந்தது.

அதனால், அரசியல் இயக்கங்களுக்கு இடையே நடந்துவந்த அரசியல் குழப்பங்களைப் பார்த்து. அவரும் அந்த இயக்கங்களை உற்று நோக்கி, தனக்குப் பிடித்த அரசியல்வாதிகளுக்கு எடுபிடி வேலைகளைச் செய்துகொண்டு, அரசியல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார். குறிப்பாக அவர், தொழிற் சங்கங்களிலே சேர்ந்து தொழிற்சங்கத் தலைவர்களுடன் நட்புக்கொண்டு உழைத்து வந்தார்.

அரசியல் கிளர்ச்சிகள், போராட்டங்கள், இவற்றிலே தீவிரமாகவும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டு பணியாற்றினார். இதனால் அவருக்கு தொழிலாளர்கள் இடையே ஒருவித செல்வாக்கும் புகழும் ஏற்பட்டது.

அரசியலில் பங்கு கொண்டு உழைத்தால் மட்டும் போதுமா? உணவுக்கும், உடைக்கும், தங்கி வாழ ஓரிடத்துக்கும், பணம் தேவையல்லவா? அதற்கு அவருக்கு வழியேதும் தெரியாமல் திகைத்தார். கிடைக்கும் பணம் கொண்டு பசியும் பட்டினியுமாக அலைந்து திண்டாடினார்.