பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பண்டிதமணியவர்கள், சபையில் வந்து தங்கியிருக்கும் பொழுது, பெருமக்கள் புடை சூழப் பெரிய விரிப்பில் சாய்ந்து அமர்ந்திருப்பார்கள். அவர்களைச் சுற்றி நாங்கள் நின்ற வண்ணம் இருப்போம். அப்பொழுது அவர்கள், எங்கெங்கு எவ்வெந் நிகழ்ச்சிகள் நடந்தனவோ அவ்வந் நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றுவிடாது சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள். நகைச்சுவை ததும்ப, மலர்ந்த முகத்துடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது இடையிடையே எம்மையும் பார்த்துக் கொள்வார்கள். அப்பார்வை 'நீங்களும் இவற்றை மனத்திற்கொளல் வேண்டும்' என அறிவுறுத்து மாபோலிருக்கும். ஆம், நாங்களும் நன்கு பதிய வைத்துக் கொண்டோம் என்பது போல முறுவலிப்போம்.

அந்நாநலம் படைத்த செம்மல், சபை விழாக்களில் நிகழ்த்திய ஒவ்வொரு சொற்பொழிவையும் ஊன்றிக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆன்றோர் வாய்ச் சொற்களைக் கேட்பது அப்பருவத்திலேயே எனக்குப் பேரின்பமாக இருந்தது. யான் தமிழிற் பெரும்புலமை பெற்றிலே னெனினும் தளராத தமிழ்ப்பற்றாளனாக இன்றும் இருந்து வருகிறேன் என்றால், அஃது அக்கேள்விப் பயனேயாம். அப்புலவர் மணிக்குத் தொண்டு செய்தும் அவர்தம் சொன்மழையில் தோய்ந்து தோய்ந்து இன்பங் கண்டும் யான் அறிந்து கொண்ட செய்திகளை அடிப்படையாக வைத்தே இதனை எழுதப் புகுந்தேன். கண்ணிற் படலம் படர்ந்து பார்வை குறைந்துள்ளமையால் அவர்தம் நூல்களை இன்று படித்தறிய இயலவில்லை. யான் அறிந்த செய்திகள் சில; கிடைத்த செய்திகளும் சில, அறியாதவையும் கிடைக்காதவையும் பல. ஆதலின் இது முழுமை பெற்ற நூலெனக் கோடல் பொருத்தமின்று.

எழுதுங்கால் யான்பட்டபாடு எழுதுதற்கரியது. படலம் படர்ந்துள்ளமையான் ஒருகண் அறவே தெரியாது. மற்றொன்றும் அரைப்பார்வை. அதுவும் மயங்கிய பார்வை. ஒருகண்ணை மூடி, மற்றொன்றைச் சற்றே திறந்து பூதக் கண்ணாடியின் துணையால் ஒவ்வோரெழுத்தாக எழுதுவேன்.