பக்கம்:எக்கோவின் காதல்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

101

படித்துகொண்டிருந்தேன். பூமி சுற்றியது. தடார் என்று பெட்டியின் மீது மயங்கிவிழுந்து விட்டேன். அதன் பின் நடந்த தொன்றும் எனக்குத்தெரியாது. விழித்துப் பார்க்கும் பொழுது என் மனைவி கமலத்தின் மடியில் படுத்திருந்தேன்.

"ஏன் இப்படி மயங்கி விழுந்துவிட்டீர்கள்?" என்று கேட்டாள் கமலம்.

“ஒன்றுமில்லை,சொல்லுகிறேன்; இந்தக் கடிதத்தையும் படி!” என்றேன்.

வாங்கிப்படித்தாள்.

அம்மா!

சென்ற கடிதத்தில் ஆதரவற்று நிற்கிறேன், என்று எழுதியிருந்தேன். ஒரு வகையில் ஆதரவும் ஆறுதலும் கிடைத்தது. அவர் மேற்கொண்ட பொதுநலத் தொண்டில் இறங்கியுள்ளேன். தமிழ்க் கழகத்தார் பெண்பள்ளி ஒன்று நிறுவி அதில் என்னை ஆசிரியை யாக்கியுள்ளார்கள். அதில் பணியாற்றி வருவதால் மன ஆறுதல் அடைந்து வருகிறேன். இலக்கியங்களும் மெய்யழகனும் அவரில்லாக் குறையை நிறைவேற்றுகிறார்கள். என்னை சிங்கப்பூருக்கு வருமாறு எழுதியிருந்தாய். நான் சிங்கப்பூருக்கு வருவதாக இல்லை. இங்கேயே இருந்து இன்னும் பல பொதுப்பணி செய்ய விரும்பியுள்ளேன். தம்பி தங்கை நலனுக்கு அடிக்கடி எழுதிக்கொண்டிருங்கள்.

வணக்கம்
காக்கை

படித்து முடித்தாள்.

"அவள் யார்?”