பக்கம்:எக்கோவின் காதல்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7
கிருஷ்ணார்ச்சுன யுத்தம்

"அவன் இப்பொழுது மட்டுமில்லை என்னோடு போட்டி போடுவது; எப்பொழுது பார்த்தாலும் போட்டிதான். எதை எடுத்தாலும் போட்டிதான்; பழனி! இனிமேல் அவனைச் சும்மாவிடப் போவதில்லை. என்றைக்காவது ஒரு நாள் என் குணத்தைக் காட்டத்தான் போகிறேன். என்னைவிட அவன் எந்த வகையில் சிறந்தவன். ஏதோ அழகாகப் பேசத் தெரிந்திருக்கிறான். அவ்வளவுதானே! காரியத்திலே ஒன்றையும் காணோமே!” என்று கிருஷ்ணன் தன் நண்பன் பழனியிடம் கூறினான்.

"சேச்சே! அவன் அப்படிப் போட்டி மனப்பான்மை படைத்தவனில்லையே! நிரம்ப நல்ல குணங்கள் படைத்தவன். அதுவும் தொழிலாளர் கழகம் என்றால் அல்லும் பகலும் பாடுபடுகிறான். அவனை இப்படி எல்லாம் சொல்லுகிறாயே!” என்று சமாதானம் கூறினான் பழனி.

"நல்லவனா! போப்பா! உனக்கு அவன் குணம் சரியாகத் தெரியாது; அப்படியானால் நம் கழகச் செயலாளர் தேர்தலுக்கு நான் நிற்கும் போது அவன் ஏன் போட்டியிடுகிறான்?”