பக்கம்:எக்கோவின் காதல்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

"கிருஷ்ணனா! அவர் காங்கிரசில் இருப்பவராயிற்றே!” என்று வியப்புடன் கேட்டாள் மதுரம்.

"நீங்கள் நினைக்கும் அந்தக் கிருஷ்ணனில்லை...நான் சொல்வது நகைச்சுவை மன்னரை”.

"ஓ! அவரா! அதுசரி ....! நான் வேறு கட்சியில் விருப்பங் கொண்டவளாயிற்றே! என்னைத் திராவிடர் கழகக் கொடியேற்ற அழைக்கின்றீர்களே!”

"அம்மையே இரண்டு கழகத்திற்கும் பெரிதும் வேற்றுமையேயில்லை. உங்கள் கட்சி பொருளாதாரத்தில் பொதுமை காண விழைகிறது. திராவிடர் கழகம் பணம்-சாதி-மதம் முதலிய எத்துறையிலும் சமதர்மம் காணப் பாடுபடுகிறது. ஆக இரண்டின் நோக்கமும் சமதர்மந்தான்...”

"அது சரி! அது எப்படியிருந்தாலும் நீங்கள் விரும்பு வதைத் தான் நான் விரும்புகிறேன். அப்படியே ஆகட்டும் இருங்கள் இதோ வருகிறேன்....இந்தக் காப்பியைச் சாப்பிடுங்கள்!” என்று நீட்டினாள்.

அவன் 'டம்ளரை'ப் பற்றினான். அவள் பிடியை விடாமல் அவனையே பார்த்தாள். அவன் 'என்ன' என்று நிமிர்ந்தான். அவள் பார்வையில் ஒரு விதச் 'சோகம்' கப்பிக் கொண்டிருந்தது.

“சகோதரி! ஏன் இப்படி....?”

"இனிமேல் சகோதரி என்று அழைக்காதீர்கள்! எனக் கென்ன பேரா இல்லை?” என்று அவள் நளினமாகப் பேசியதிலிருந்து அவள் கருத்தை நன்கு புரிந்து கொண்டான்.