பக்கம்:எக்கோவின் காதல்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

“கொஞ்ச மென்ன! எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள். தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தாள். இவன் தண்ணீரைப் பருகிய பின் குவளையைக் கொடுத்தான். அவள் கை நீட்டி வாங்கினாள். ஆனால் இவன் பிடியை விடுவதாயில்லை. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். அவன் பார்வையில் கலவரம் நிறைந்திருந்தது. பொன்னம்மாள் அவனுடைய கருத்தைப் புரிந்து கொண்டாள். அவள் நாணித் தலைகுனிந்து “இதெல்லாம் நல்லா இருக்குங்களா?” என்று கேட்டாள்.

“எனக்கு நல்லாத்தானிருக்கு” என்றான் அரங்கசாமி. இருந்தாலும் குரல் தடுமாறியிருந்தது.

“இதெல்லாம் மாமாவுக்குத் தெரிந்தால் என்னைக் கொன்று போடுவாரே!” என்றாள் பொன்னம்மாள்.

“மாமாவுக்குத் தெரிந்தால் தானே!” என்று இவன் சொன்னான்.

"தெரியாமலா போகும்? என்றைக்காவது தெரிந்தால்?” என்று அவள் சொன்னாள்.

இப்படி அவள் சொன்னதும் அரங்கசாமிக்குத் துணிவு பிறந்து விட்டது. “என்றைக்காவது தெரிந்தால்' என்று சொல்வதிலிருந்து இவளுக்கும் உடன்பாடு என்பதை அறிந்து கொண்டான்.

"பொன்னம்மா” என்று சொல்லிக் கொண்டே நெருங்கினான். பொன்னம்மாள் பேசாதிருந்தாள். மோனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே. பிறகு கேட்கவா வேண்டும்! இளம்