பக்கம்:எக்கோவின் காதல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

சென்றிருந்தாள். அவள் தங்கை மாடிக்கு வந்தாள். வருவதைப் பார்த்ததும், 'வாம்மா! உன்னிடம் சில செய்திகள் சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்தேன். நீயே வந்து விட்டாய்! உன் மறுமணம் பற்றி நான் ........' என்று சொல்லி முடிக்குமுன் குறுக்கிட்டுப் பேசினாள்.

'என் திருமணத்தில் உங்களுக்கு இவ்வளவு அக்கறை இருக்கிறதா?' என்றாள்.

'என்ன அப்படிக் கேட்கிறாய்! நான் எவரையும் அன்போடு நேசிக்கிறேன். இந்த நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் - எல்லா நாட்டு மக்களும் தோழர்களாக இருக்கவேண்டுமென்ற கொள்கையுடையவன். அந்த எண்ணம் எங்கும் பரவி ஒளிவிடவேண்டும் என்று எண்ணி உருகுபவர்களிலே நானும் ஒருவன். அப்படிப்பட்டவன் உன்னிடத்தில் மட்டும் அக்கறை கொள்ளாமல் இருப்பானா?' என்று முடித்தான். அவன் பேச்சில் அன்பு குழைந்திருந்தது.

'அப்படியானால் இதோ இதைப் பாருங்கள்' என்று ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்துவிட்டு விரைந்து சென்று விட்டாள். அவன் வியப்புடன் பிரித்துப் பார்த்தான்.

'அன்புடையீர்! முதலில் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரே கொடியில் இரண்டு அரும்புகள் தோன்றின. ஆனால் ஓரரும்பு மலருமுன் கீழே விழுந்து விட்டது. மற்றொன்று மொட்டாகி - போதாகி - மலராகி - தேன் நிறைந்து மணம் வீசிக்கொடியில் சிரித்துக் கொண்டிருக்கிறது. உதிர்ந்த அரும்பு வாடிக்கொண்டிருக்கும் நிலையில், சிரிக்கும் மலரைக் கண்டு நாமும் ஏன் அப்படியிருக்கக்கூடாது என்று பேராசைப்படுகிறது. பக்கத்திலிருந்த முல்லை சொல்கிறது. போடி பைத்தியக்காரி உதிர்ந்த பிறகு நீ எப்படி மலர முடியும்?